நீதிபதி சஞ்சீவ் கன்னா! கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுத்தவர்.. வருங்கால உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, இன்னும் சில மாதங்களில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருந்த நிலையில் அவரது ஜாமீன் மனு மீது நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முக்கிய உத்தரவை பிறப்பித்தது. நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய வசதியாக இடைக்கால ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது சஞ்சீவ் கன்னா அமர்வு.

இரண்டு நீதிபதிகளில் மூத்தவரான சஞ்சீவ் கன்னா, 2024 நவம்பரில் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இருக்கும் டிஒய் சந்திரசூட் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவர் நவம்பர் 10, 2024 முதல் 2015ஆம் ஆண்டு மே 13 வரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார். தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக தற்போது சஞ்சீவ் கண்ணா உள்ளார்.
கடந்த ஜனவரி 2019 இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் சஞ்சீவ் கன்னா. வயது மற்றும் அனுபவத்தில் அவரை விட மூத்த நீதிபதிகள் 33 பேர் இருந்தும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதற்கு முன்பு, சஞ்சீவ் கன்னா கடந்த 2005 முதல் 14 ஆண்டுகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். வரிவிதிப்பு மற்றும் பிற வணிகச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற சஞ்சீவ் கன்னா கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு முக்கியமான வழக்குகளில் தீர்ப்புகளை அளித்துள்ளார்.
1960 ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி பிறந்தவர் சஞ்சீவ் கன்னா. டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். 1983 இல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு, டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் அவர் டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களில் வழக்கறிஞராகச் செயல்பட்டார்.
சஞ்சீவ் கன்னா, எமர்ஜென்சி காலகட்டத்தின் போது தனது உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்த புகழ்பெற்ற நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு சட்டம், நேரடி வரிகள், நடுவர் மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்கள், நிறுவன சட்டம், நிலச் சட்டங்கள், சுற்றுச்சூழல் மற்றும் மாசு சட்டங்கள் மற்றும் மருத்துவ அலட்சியம் ஆகிய துறைகளில் வழக்கறிஞராகப் பயிற்சி செய்தார். குறிப்பாக வரி விதிப்பு தொடர்பான வழக்குகளில் திறமையாக வாதிடக்கூடிய சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர் சஞ்சீவ் கன்னா.
நீதிபதி சஞ்சீவ் கன்னா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளோடு VVPAT இயந்திர ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தையும் முழுமையாக எண்ணி சரிபார்க்கக் கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து அண்மையில் தீர்ப்பை வழங்கினார்.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்திற்கு தடை கோரிய மனுவை கடந்த மார்ச் மாதம் சஞ்சீவ் கன்னா அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்தது. அதோடு, தேர்தல் ஆணையர்களை அவசர அவசரமாக நியமித்த அரசை விமர்சித்தது. "இவ்வளவு வேகம் எதற்கு.. நீங்கள் மெதுவாக செயல்பட்டிருக்கலாம்" என்று நீதிபதி கன்னா மத்திய அரசு தரப்பிடம் கூறினார்.
சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச் மார்ச் 2023 இல் மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவரும் தெலுங்கானா எம்எல்சியுமான கே.கவிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவர்கள் கவிதாவை விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோருமாறும், உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். அக்டோபர் 2023 இல், சஞ்சீவ் கன்னா தலைமையிலான பெஞ்ச், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த நீதிபதிகள் அமர்வில் சஞ்சீவ் கன்னாவும் இடம்பெற்றிருந்தார். அவர் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கு ஒத்துப்போகும் தீர்ப்பை எழுதியிருந்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்ததை உறுதி செய்த அமர்விலும் இடம்பெற்றிருந்தார் சஞ்சீவ் கண்ணா.
சந்திரசூட்டுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள சஞ்சீவ் கன்னா, வழங்கி வரும் தீர்ப்புகள் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி அவர் தீர்ப்பளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications