கொரோனா சிகிச்சையில் ஐவர்மெக்டின்.. நேற்று அனுமதி அளித்த கோவா.. இன்று எச்சரிக்கும் உலக சுகாதார மையம்
டெல்லி: கொரோனா நோயாளிக்கு ஐவர்மெக்டின் என்ற மருந்தைப் பயன்படுத்தக் கோவா அரசு நேற்று அனுமதி அளித்திருந்த நிலையில், இன்று உலக சுகாதார அமைப்பு ஐவர்மெக்டினை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது 35 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்போ பைத்தியம்.. இப்போ வைத்தியம்.. இதைப் பார்த்தா கொரோனாவே ரூம் போட்டு சிரிக்கும்!
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க எந்தவொரு மருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
புதிய மருந்து ஐவர்மெக்டின்
இருப்பினும் ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஐவர்மெக்டின் என்ற மருந்து கொரோனா பாதிப்பு குறைப்பதாகவும் இதன் மூலம் கொரோனாவை அழிக்க முடியலாம் என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தனர். பிரிட்டன். ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் இதே முடிவு தெரியவந்தது.
கோவா அரசு
இதையடுத்து கோவா மாநிலத்திலும் ஐவர்மெக்டின் மருந்தை 18 வயதைத் தாண்டிய அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் பயன்படுத்த அம்மாநில அரசு நேற்று அனுமதி அளித்தது. கோவா அரசு அனுமதி அளித்து ஒரு நாள்கூட ஆகாத நிலையில், ஐவர்மெக்டின் மருந்தை அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் பண்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
பயன்படுத்த வேண்டாம்
இது குறித்து உலக சுகாதார மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், எந்தவொரு மருந்தையும் பயன்படுத்தும்போதும் நோயாளிகளின் பாதுகாப்பும் ஒரு மருந்தின் செயல்திறனும் முக்கியம். கொரோனா வைரசை ஐவர்மெக்டின் மருந்து அழிக்க முடியும் என்பதை உறுதி செய்ய எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனவே, பாராசைட்டிக் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஐவர்மெக்டினை அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் பயன்படுத்த வேண்டாம்" என அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா சிகிச்சை மருந்துகள்
இந்தியாவில் தற்போது மோசமாகப் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தைக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுவும்கூட நுரையீரல் பாதிப்பை மட்டுமே கட்டுப்படுத்த உதவும். கொரோனா வைரசை அழிக்காது என்பது குறிப்பிடத்தது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 2-deoxy-D-glucose என்ற புதிய மருந்தை அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்திருந்தது.