"சபாநாயகர் யார்?" லிஸ்டில் உள்ள தென்மாநில எம்பி.. ஆஹா இதை யாரும் எதிர்பார்க்கல.. பாஜக போடும் பிளான்
டெல்லி: அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில், புதிய சபாநாயகர் யார் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்குப் பலரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த இருவரின் பெயர் லிஸ்டில் இருக்கிறதாம். இந்த இருவரில் ஒருவருக்கே சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
வரும் ஜூன் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கூட இருக்கிறது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 26ஆம் தேதி லோக்சபா சபாநாயகரை அரசு நியமிக்கும் எனத் தெரிகிறது. பாஜக 2.0இல் ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தார்.

ரேஸ்: இப்போது ஓம் பிர்லா உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பத்ருஹரி மஹ்தாப் மற்றும் டி புரந்தேஸ்வரி ஆகியோர் பெயர்கள் லிஸ்டில் முக்கிய இடத்தில் இருக்கிறது. இவர்கள் முறையே ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். இப்போது அமைந்துள்ள என்டிஏ ஆட்சிக்கு இந்த இரு மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதால் இரு மாநிலங்களில் ஒருவருக்குச் சபாநாயகர் பதவி கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதில் பத்ருஹரி மஹ்தாப் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் தேர்தலுக்கு சில காலம் முன்பு தான் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்திலிருந்து பாஜகவில் இணைந்திருந்தார். இப்போது ஒடிசாவில் முக்கிய பாஜக தலைவராக இருக்கிறார். அடுத்து லிஸ்டில் இருப்பவர் புரந்தேஸ்வரி.. இவர் தான் இப்போது ஆந்திரப் பிரதேச பாஜக மாநில தலைவராக உள்ளார். இவர் என்டிஆரின் மகள்.. அதாவது சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சகோதரி.
என்ன பிளான்: சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக இந்த இரு மாநிலங்களிலும் அமோக வெற்றி பெற்றது. ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக நவீன் பட்யநாக் ஆட்சி செய்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக ஆட்சியை அமைத்துள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி தொடர அவரது ஆதரவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு தரச் சபாநாயகர் பதவியைத் தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கூட்டணி அரசு அமையும் போது சபாநாயகர் பதவி மிக மிக முக்கியமானதாக இருக்கும். இதன் காரணமாகத் தெலுங்கு தேசம் கட்சிக்குச் சபாநாயகர் பதவியை விட்டுத் தர பாஜக தயாராக இல்லை எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக பத்ருஹரி மஹ்தாப் மற்றும் டி புரந்தேஸ்வரி ஆகியோரில் ஒருவருக்கே இந்த சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படுகிறது.
என்ன நடக்கும்: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 26ஆம் தேதி சபாநாயகர் பெயரை முன்மொழிந்து தீர்மானத்தைக் கொண்டு வருவார். அந்த தீர்மானம் ஏற்றுக் கொண்ட பிறகு புதிய சபாநாயகர் பொறுப்பேற்பார். அதன் பிறகு புதிய சபாநாயகரே அமைச்சர்களை அவைக்கு அறிமுகப்படுத்துவார்.
விதிகளின்படி சபாநாயகருக்குத் தேர்தல் நடக்கலாம். ஆனால், இதுவரை நமது நாட்டில் அப்படியொரு நிகழ்வு நடந்ததே இல்லை. எப்போதும் எந்த கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சியே சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும். எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே தேர்தல் நடக்கும். ஆனால், இதுவரை அப்படியொரு நிகழ்வு நடந்ததே இல்லை.
எதிர்க்கட்சிகள் திட்டம்: எதிர்க்கட்சிகள் தங்களுக்குத் துணைச் சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறதாம். ஒரு வேலை அரசு தங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் பொது வேட்பாளரை நிறுத்தித் தேர்தல் நடத்த வழிவகை செய்வோம் என்றும் கூறுகிறார்கள். பொதுவாகவே துணைச் சபாநாயகர் பதவி எதிர்க்கட்சி வசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகராக ஒருவர் தேர்வு செய்யப்படும் வரை காங்கிரஸின் கே சுரேஷ் இடைக்கால சபாநாயகராகச் செயல்படுவார் எனத் தெரிகிறது. கேரளாவைச் சேர்ந்த 68 வயதான கே சுரேஷ்.. இப்போது நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக எம்பியாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications