குலுங்கிய டெல்லி! நாட்டில் நிலநடுக்கம் அதிகரிக்க என்ன காரணம்! சென்னை நிலை என்ன.. பாதுகாப்பாக உள்ளோமா
டெல்லி: தலைநகர் டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. அதற்கான காரணத்தையும்.. இது ஆபத்தானதா என்பதையும் பார்க்கலாம்.
உலகெங்கும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாகப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரியளவில் இல்லாமல் இருந்தது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியிருந்தனர்.
ஆனால், இந்தாண்டு பெரும்பாலான இடங்களில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாகவே இருந்தது.

டெல்லி நிலநடுக்கம்
இந்தச் சூழலில், தலைநகர் டெல்லி புத்தாண்டு அன்று அதிர்ந்து போய்விட்டது. புத்தாண்டு தினத்தன்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.8ஆக பதிவாகி உள்ளது. புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாகச் சிறியளவில் நிலநடுக்கம் ஏற்படுவதாக நாம் செய்திகளைப் படித்திருப்போம். சமீப காலங்களில் இந்தியாவில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படுகிறதா? இதனால் நமக்கு எதாவது ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

எந்த பகுதிகள்
பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறித்து டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகிறது. கடந்த 20,30 ஆண்டுகளின் தரவுகளை நாம் பார்த்தால், பல நிலநடுக்கங்கள் டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ளன இந்த நிலநடுக்கங்களின் வலிமையும் மெல்ல அதிகரித்தே வருகிறது. ஏன் நிலநடுக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் என்ன ஆபத்து என்பதைப் பார்க்கும் முன்பு, நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதை பார்க்காலம்.

ஏன் ஏற்படுகிறது
பூமியின் டெக்டோனிக் தட்டுகள் தான் நிலநடுக்கம் ஏற்படக் காரணமாக உள்ளது. பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள டெக்டோனிக் தட்டுகள் ஒன்றுக்கொன்று எதிராக நகரும் போது, பூகம்பங்கள் ஏற்படுகின்றன. சமீப காலங்களில் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகரித்து வருவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகள் இரண்டு பெரிய டெக்டோனிக் தகடுகளின் எல்லையில் (fault zones) அமைந்திருப்பதால், நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்தியா, நேபாளம்
பூமிக்கு அடியே இருக்கும் இந்தியத் தட்டு நேபாளத் தட்டு நோக்கி நகர்ந்தபோதுதான் இமயமலை உருவானது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது உலகெங்கும் உள்ள மலைத்தொடர்களில் மிகவும் இளமையானது இமயமலை தான். இளமையானது என்றவுடன் ஏதோ சில ஆண்டுகள் என நினைத்துவிட வேண்டும். இமயமலை 4 முதல் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.. இமயமலை உருவானது ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும், இந்த இரண்டு தட்டுகளின் மோதலானது இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளையும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதிகளாக மாற்றிவிட்டது.

டெல்லி
இதன் காரணமாகவே டெல்லி உட்படப் பகுதிகளில் நிலநடுக்கம் அதிகம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2017 முதல் 2020 வரை 3 ஆண்டுகளில் மட்டும் 26 முறை நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ரிக்டர் அளவுகோளில் 3க்கு மேல் பதிவாகியுள்ளது. கடந்த ஜனவரி 26, 2001இல் பூஜ் பகுதியில் ஏற்பட்ட 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் டெல்லி-என்சிஆர் பகுதியிலும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு, 1960 ஆகஸ்ட் 27இல் டெல்லியில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான பூகம்பம் தலைநகரை உலுக்கியது. பலர் உயிரிழக்கவும் காரணமாக அமைந்தது.

பாதுகாப்பு இல்லை
கடந்த 30 ஆண்டுகளில் டெல்லியில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இருப்பினும், இவற்றில் பல கட்டிடங்கள், அதிலும் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத காலணிகள் மற்றும் குடியிருப்புகளில், நிலநடுக்கத்தைத் தாங்கும் பிஐஎஸ் (BIS) தரநிலைகளை மீறுகின்றன. இங்கு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், இந்த கட்டிடங்கள் அப்படியே சரிந்துவிடும் அபாயம் உள்ளது. 2020இல் எடுக்கப்பட்ட சர்வே-இல் டெல்லியில் உள்ள 90% கட்டிடங்கள் நில அதிர்வு மண்டலம் பரிந்துரைகளைப் பூர்த்தி செய்யவில்லை. பூர்த்தி செய்துள்ள கட்டிடங்களும் கூட பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இடிந்து விழுவதைத் தடுக்கும் வகையில் மட்டுமே உள்ளன. மோசமான பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.

சென்னை
தமிழக தலைநகர் சென்னையில் இதில் ஜோன் 3இல் உள்ளது. இங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைவு. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளும் ஜோன் 2,3இல் தான் உள்ளன. எனவே, இங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதேநேரம் அதிக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள டெல்லியில் கட்டிடங்கள் வலுப்படுத்த வேண்டியது அவசியம். ஜப்பான் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அதிக நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதுபோன்ற கட்டிடங்கள் டெல்லியில் கட்டப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் அங்கு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications