ராகுல் காந்தி பேசும் போது.. சரியாக திருப்பப்பட்ட கேமரா.. அவரை காட்டவே இல்லையே.. என்ன கொடுமை இது?
டெல்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களவையில் பேசும் போது பெரும்பாலும் அவரை காட்டாமல் சபாநாயகரையே காட்டிக்கொண்டிருந்தது அரசு தொலைகாட்சியான சன்சத் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்., எம்.பி., ராகுல்காந்தி பேசினார். அதில், மணிப்பூர் அகதி முகாமில் ஒரு தாய், தன்னுடைய மகன் சடலத்துடன் ஒருநாள் முழுவதும் படுத்திருந்தேன் என தெரிவித்தார். நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை.

அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது.
பாஜகவினர் பாரதமாதாவின் காவலர்கள் அல்ல, மாறாக அவளை கொலை செய்த கொலைகாரர்கள். இந்தியா என்ற கருத்தோட்டத்தை மணிப்பூரில் அழித்துவிட்டனர். நாடு முழுவதும் நான் மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமை நடைபயணம்' இன்னும் நிறைவடையவில்லை.
நடைபயணத்தின்போது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன்; விவசாயிகளின் வலியை பிரதிபலிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீங்கள் தேச துரோகிகள்.. தேச பக்தர்கள் இல்ல, என்றார்.
சர்ச்சைக்குள்ளான காட்சி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களவையில் பேசும் போது பெரும்பாலும் அவரை காட்டாமல் சபாநாயகரையே காட்டிக்கொண்டிருந்தது அரசு தொலைகாட்சியான சன்சத் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அதன்படி ராகுல் காந்தி முக்கிய விஷயங்களை பேசும் போதெல்லாம் அவர் காட்டப்படவில்லை.
சபாநாயகர் அமர்ந்து இருப்பதை குழந்தைத்தனமாக அந்த தொலைக்காட்சி காட்டியது. நாடாளுமன்றத்தின் இந்த தொலைக்காட்சி என்பது நடுநிலையாக நாடாளுமன்றத்தில் நடப்பதை அப்படியே காட்டும். ஆனால் இன்று ராகுல் காந்தி பேசும் போது அவர் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
அதே சமயம் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசும் போது, முழுக்க முழுக்க அவர் மட்டுமே காட்டப்பட்டதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. நேற்றும் இந்த தொலைக்காட்சி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. நேற்று நாடாளுமன்றத்தின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது சன்சத் டிவியில் அரசின் சாதனைகளை ஒளிபரப்பு செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மாற்றம் காரணமாக அரை மணிநேரம் என்ன செய்வது என்பது தெரியாமல் சபாநாயகர் ஓம்பிர்லா தவித்த தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சான்சத் டிவி சேனல் உள்ளது. இது நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபாவில் நடக்கும் விவாதங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை இந்த சான்சத் டிவி ஒளிபரப்பி வருகிறது.
மக்களின் வரிப்பணத்தில் இது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்., சார்பில் அசாம் மாநில எம்.பி., கெளரவ் கோகாய் மீண்டும் முன்மொழிந்து நேற்று உரையை தொடங்கினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்., எம்.பி., ராகுல்காந்தி தொடங்கி வைத்து பேசுவதாக இருந்தது. ஆனால் ராகுல் நேற்று பேசவில்லை. இதையடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications