ஜோ பைடனுக்கு மட்டும் விளக்கிய மோடி! ஜி20ல் கவனம் பெற்ற கோனார்க் சக்கரம்! பின்னணி என்ன?
டெல்லி: ஜி20 உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. இதில் மாநாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கோனார்க் சக்கரத்தின் முன்பு நின்று உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்றார். இதனால் கோனார்க் சக்கரம் என்பது அனைவரின் கவனத்தையும் பெற்ற நிலையில் அது எங்கு உள்ளது? அதன் சிறப்பு என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடக்கும். இந்த முறை ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது.

இதையடுத்து கடந்த ஓராண்டாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் என்பது நடந்து வந்தது. மேலும் பிரமாண்டமாக ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதையடுத்து திட்டமிட்டப்படி ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு நாளை வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றே பிற நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் குவிந்தனர். அமெரிக்க அதிரபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஏராளமான தலைவர்கள் மாநாட்டிற்காக வருகை தந்துள்ளனர்.
இதையடுத்து இன்று ஒவ்வொரு தலைவர்களும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபத்துக்கு வந்தனர். அவர்களை பிரதமர் மோடி கைக்குலுக்கி, கட்டியணைத்து வரவேற்றார். பிரதமர் மோடி உலக தலைவர்களை வரவேற்ற மேடையின் பின்னணியில் கோனார்க் சக்கரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ஜி20 லோகோவும், மறுபக்கத்தில் மாநாட்டின் கருப்பொருளும் (ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்) அச்சிடப்பட்டிருந்தது. இதை ஜி20 தலைவர்கள் வியந்து பார்த்தனர்.
இது பலரது கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. அதோடு கோனார்க் சக்கரம் குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விளக்கி கூறினார். மேலும் பலரும் கோனார்க் சக்கரம் எங்கு உள்ளது? அதன் சிறப்பு என்ன? என்பது பற்றி குறித்து இணையதளங்களில் தேட தொடங்கினர். அந்த வகையில் தான் தற்போது முக்கிய விபரங்கள் கிடைத்துள்ளன.
அதாவது கோனார்க் சக்கரம் என்பது ஒசடிாவில் உள்ளது. 13ம் நூற்றாண்டில் ஒடிசாவின் கோனார்க் பகுதியில் அப்போதைய மன்னர் முதலாம் நரசிம்மதேவரால் சூரியனுக்காக கட்டப்பட்ட கற்கோவிலில் தான் இந்த சக்கரம் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரை 7 குதிரைகள் இழுத்து செல்கின்றன.
இந்த தேரில் மொத்தம் 12 ஜோடிகள்(ஆண்டின் 12 மாதங்களை குறிக்கும்) என மொத்தம் 24 சக்கரங்கள் (வெளியே 12 சக்கரங்கள் மட்டுமே தெரியும்) இடம்பெற்றுள்ளன. இது ஒரு நாளில் இருக்கும் 24 மணிநேரத்தை குறிக்கும். இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றும் 10 அடி விட்டம் கொண்டவை. இது தர்ம சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி நம் தேசியக் கொடியில் அசோக சக்கரம் அமைந்ததன் வரலாற்று பின்னணி இந்த கோவில் தான் என சொல்லப்படுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோவிலின் சக்கரம் ஜி20 மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோனார்க் சக்கரம் என்பது காலத்தை குறிக்கும். ஒரு சக்கரத்தில் 24 ஆரங்கள் மொத்தம் 12 ஜோடிகளாக உள்ளன. இந்த 12 என்பது ஒரு ஆண்டில் வரும் மாதங்களை குறிக்கும்.
மேலும் இந்த சக்கரம் என்பது இந்தியாவின் பழம்பெருமையையும், அதன் கலாச்சார வளத்தையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு சக்கரத்தின் சுழலும் இயக்கமானது காலச்சக்கரம், முன்னேற்றம் மற்றும் தொடர்ச்சியான மாற்றத்தை குறிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாடு என்பது காலமாற்றத்தை குறிக்கும் என்பதை உலக தலைவர்களுக்கு கூறும் வகையில் இந்த கோனார்க் சக்கரம் ஜி20 மநாாட்டில் இடம்பெற செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications