‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
டெல்லி: முதற்கட்ட லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் மற்றும் தாலியை குறிப்பிட்டு மேடைக்கு மேடை பிரசாரம் செய்து வருகிறார். பிரதமர் மோடியின் இந்த பிரசாரம் சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் இந்த திடீர் பிரசார யுக்தி மாற்றத்தின் பின்னணியில் உள்ள 2 முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
2024.. ஜுன் 4 இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கியமான தேதி. ஏனென்றால் அன்றைய தினம் தான் நம் நாட்டின் லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

நம் நாட்டில் மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. அன்றைய தினம் தான் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இதன் தொடர்ச்சியாக வரும் 26ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
முஸ்லிம் டூ தாலி: இந்நிலையில் தான் பிரதமர் மோடி மதம் சார்ந்த விஷயங்களை மேடைகளில் பேசி காங்கிரஸை விமர்சனம் செய்கிறார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதாவது, ‛‛காங்கிரஸ் ஆட்சியில் நாட்டு மக்களின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று கூறினார்கள். 2006ல் நாட்டு வளர்ச்சிின் பலன்களை சமமாக பகிர்ந்து கொள்ள சிறுபான்மையினருக்கே முதல் உரிமை என்று கூறினார்கள். காங்கிரஸ் மக்களின் சொத்துகளை பங்கீடு செய்து முஸ்லிம்களுக்கு வழங்கும் என கூறினார்கள்.
பெண்களின் தங்கத்தை எடுத்த அதனை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. அப்படி பார்த்தால் தாய்மார்கள், சகோதரிகளின் தாலி கூட மிஞ்சாது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?'' என்று கேள்வி கேட்டார். இதன்மூலம் இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர்கள் என பிரதமர் மோடி கூறியதாக சர்ச்சை கிளம்பியது.
காங்கிரஸ் புகார்: இதையடுத்து வகுப்புவாத வன்முறையை பிரதமர் மோடி தனது பேச்சின் மூலம் தூண்டுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் இந்த பிரசார யுக்தியின் பின்னணி என்ன? என்பது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இதுபற்றி பாஜகவின் பெயர் சொல்ல விரும்பாத தலைவர் ஒருவர், ‛தி ப்ரிண்ட்' செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது:
முதல் காரணம்: லோக்சபா தேர்தலில் பாஜகவின் பலம் என்பது இந்தி பேசும் மாநிலங்களாகும். அதாவது இந்திய வரைபடத்தில் மத்திய பகுதியில் உள்ள மாநிலங்கள் தான் பாஜகவின் பலமான மாநிலங்களாக உள்ளன. இப்போது அடுத்தடுத்து இந்த மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தென்மாநிலங்களில் 2ம் கட்டமாக தேர்தல் நடந்தாலும் கூட கர்நாடகாவை தவிர பிற மாநிலங்களில் பாஜகவுக்கு கட்டமைப்பு இல்லை.
இதனால் 2ம் கட்ட தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களில் அதிக இடங்களை வெல்ல வேண்டும். எங்களை பொறுத்தவரை அயோத்தியில் ராமர் கோவில் கட்டி திறக்கப்பட்டுள்ளது என்பது பெரிய பலனை தரும். இது பிளஸ் பாயிண்டாக இருந்தாலும் கூட பாஜக மேலிடம் இன்னும் வாக்காளர்களை உற்சாகப்படுத்த வேண்டி உள்ளது. ஏனென்றால் கடந்த 2019ல் முதற்கட்ட தேர்தலில் ஓட்டு சதவீதம் என்பது 70 சதவீதமாக இருந்தது. இது இப்போது 65.5 சதவீதமாக குறைந்தது. பல இடங்களில் 6 முதல் 8 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு சரிவை சந்தித்துள்ளது.
பிரதமராக மோடி தான் மீண்டும் வருவார் என்று பலரும் நம்புகின்றனர். இதனால் தொழிலாளர்கள் முதல் பணக்காரர்கள் வரை பலரும் ஓட்டளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இது தேர்தலுக்கு உகந்தது அல்ல. இதனால் தான் உணர்வுப்பூர்வமாக பேசி நாங்கள் வாக்காளர்களை பூத்களுக்கு கொண்டு செல்ல உள்ளோம்'' என்றார். இது முதல் காரணம் என கூறப்படுகிறது.
2வது காரணம்: இதுபற்றி ராஜஸ்தானை சேர்ந்த அரசியல் நிபுணர் திரிபுவன் கூறுகையில், ‛‛அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவும், இடஒதுக்கீட்டை நீக்கவும் பாஜக விரும்புவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதற்கு பாஜக பதில் தாக்குதல் நடத்த வேண்டி உள்ளது. இதனால் பாஜக இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை கையில் எடுத்துள்ளதாக நினைக்கிறேன். மேலும் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெல்ல குறிவைத்துள்ளது. இது பாஜகவுக்கு ஒருவித அழுத்தத்தை கொடுத்துள்ளது
மேலும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக விரும்புகிறது. இதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பாஜக ஆர்வமாக உள்ளது என தெரிவித்தார். இது பாஜகவுக்கு ஓபிசி, தலித், பழங்குடியினர் இடையே சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் தான் பிரதமர் மோடி இன்னொரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஓபிசி, எஸ்சி, எஸ்டிக்களின் இடஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது என பதிலடி கொடுத்தார். மேலும் எதிர்க்கட்சிகளின் இத்தகயை பிரசாரம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் பாஜகவினர் தங்களின் பிளஸ் பாயிண்டாக உள்ள இந்து மதம் சார்ந்து முந்தைய ஆட்சியாளர்களின் செயல்பாட்டை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்'' என்றார். இது 2வது காரணம் என சொல்லப்படுகிறது.
அரசியல் வல்லுநர்கள்: இதுபற்றி சில அரசியல் வல்லுநர்கள் கூறுகையில், ‛‛பாஜக என்பது இந்து பெருமை பேசி வருகிறது. அதனை தான் பெருமையாக கருதுகிறது. இதுதான் பாஜகவுக்கு பலமாகவும் உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி தங்கள் கட்சியின் பலத்தை கையில் எடுத்து வாக்கு சேகரிக்கிறார். இதன்மூலம் அவர் பாஜகவின் வாக்கு வங்கியை காப்பாற்றுவதோடு, எதிர்க்கட்சியான காங்கிரஸை சீண்டுகிறார்'' என்றனர்.
2ம் கட்ட தேர்தல்: இந்த 2 ம் கட்ட தேர்தலுக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தற்போதைய லோக்சபா தேர்தலை பொறுத்தமட்டில் பாஜக 370 இடங்களிலும், பாஜக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களையும் கைப்பற்றும் முனைப்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்தி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க ‛இந்தியா' கூட்டணி தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.
இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி தற்போது 2ம் கட்டமாக தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டபோது பிரதமர் மோடி பேசுகையில், ‛‛செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும். பல்வேறு முதலீடுகள் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எப்போதும் இந்த மோடி நாட்டில் புறக்கணிக்கப்பட்டவர்களின் பக்கம் தான் இருப்பார்’’ என சூளுரைத்தார்.
சர்ச்சையாகும் பேச்சுகள்: ஆனால் முதற்கட்ட தேர்தல் முடிவடைந்து 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் தொடங்கிய நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு சில நாட்களாக சர்ச்சையை விவாதத்தை கிளப்பி வருகின்றன. முதற்கட்ட தேர்தலில் பிரதமர் மோடி வாரிசு அரசியலை மட்டுமே குறிவைத்து பேசினார். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் செய்து வரும் நிலையில் பிரதமர் மோடி இந்த வியூகத்தை கையில் எடுத்தார். ஆனால் தற்போது களம் மாறிவிட்டது. 2ம் கட்ட தேர்தலில் தென்மாநிலங்களில் கேரளாவின் 20, கர்நாடகாவின் 14 தொகுதிகளை தவிர பெரும்பாலான தொகுதிகள் ஹிந்தி பேசும் இந்திய மாநிலங்களில் தான் உள்ளன.
அதாவது 2ம் கட்ட தேர்தலை பொறுத்தமட்டில் மொத்தம் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. அதன்படி அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, ஜம்மு காஷ்மீரில் ஒன்று, கர்நாடகாவில் 14, கேரளாவில் 20, மத்திய பிரதேசத்தில் 7, மகாராஷ்டிராவில் 8, மணிப்பூரில் ஒன்று, ராஜஸ்தானில் 13, திரிபுராவில் ஒன்று, உத்தர பிரதேசத்தில் 8, மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள் என மொத்தம் 89 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் , சத்தீஸ்கர் உள்ளிட்டவை ஹிந்தி பேசும் மாநிலங்களாகும். அதன்படி 2ம் கட்டமாக தேர்தலில் இந்த மாநிலங்களின் 46 தொகுதிகள் உள்ளன. இந்த 46 தொகுதிகளை அப்படியே அள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications