"ஆதாரம் இல்லையாம்.!" மணிப்பூரில் பயங்கரம்! போலீசார் சொன்ன ஷாக் பதில்.. எஃப்ஐஆர் அனுப்பவே ஒரு மாதம்
டெல்லி: மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனால் அங்கே ஒட்டுமொத்த மணிப்பூரும் முடங்கியுள்ளது. பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இணையச் சேவை முடக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்ட போதிலும் அங்கே முழுமையாக அமைதி திரும்பவில்லை. இதற்கிடையே அங்கே இரண்டு குக்கி இன பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீடியோ அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஷாக் சம்பவம்: இந்தச் சம்பவத்தைப் பலரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த கொடூரம் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூரமான பலாத்கார சம்பவம் மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டோர் வேறொரு மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு இந்த கேஸை மாற்றவே ஒரு மாதத்திற்கும் மேலாக ஆகியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து அம்மாநில போலீசார் தங்கள் ட்விட்டரில், "ஏற்கனவே இதில் முக்கிய குற்றவாளியைக் கைது செய்துவிட்டோம். இந்த கடத்தல் மற்றும் கூட்டுப் பலாத்காரம் விவகாரத்தில் இன்று மேலும் மூன்று பேரைக் கைது செய்துள்ளோம். இதுவரை மொத்தம் நான்கு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளனர்.
ஆதாரம் இல்லையாம்: சுமார் 2 மாதங்கள் கழித்தே போலீசார் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசார் இத்தனை காலம் அமைதியாக இருந்தது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கில் இதற்கு முன்பு வரை எந்தவொரு ஆதாரமும் இல்லாததால் காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை அம்மாவட்ட எஸ்பி சச்சிதானந்தா என்பவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல இந்தச் சம்பவத்திற்கும் போலீசாரும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "அன்றைய தினம், நோங்போக் செக்மாய் காவல் நிலையத்தில் இருந்த ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து வந்தனர். அனைத்து போலீசாரும் அங்கு இருந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் யாரும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இதில் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் சொன்ன கருத்து இதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. அதாவது அவர்கள், "போலீசார் எங்கள் இருப்பிடத்தில் இருந்து சிறிது தூரத்திற்கு அழைத்துச் சென்று நடுரோட்டில் இறக்கிவிட்டனர். அந்த பாதையில் தான் வன்முறை கும்பல் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் அங்கே இறக்கிவிட்டனர். இறக்கிவிட்டனர் என்பதை விட எங்களை வன்முறையாளர்களிடம் கொடுத்ததே அவர்கள்தான்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காலதாமதம்: இந்த பலாத்காரம் கடந்த மே 4ஆம் தேதி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் மே 18ஆம் தேதி ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்புடைய போலீஸ் நிலையத்திற்கு இதை அனுப்பவே ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ளது. ஜூன் 21ஆம் தேதி தான் தொடர்புடைய போலீஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பான கேள்விக்கே ஆதாரம் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது வீடியோ வெளியாகும் முன்பு வரை அவர்களிடம் உரிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications