பிரசாந்த் கிஷோர் முன் வைத்த 4 ஷாக் நிபந்தனைகள்.. கட்சியே காலியாகும் என வெலவெலத்த காங். மேலிடம்!
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலை முன்வைத்து தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் முன்வைத்த சில நிபந்தனைகளை காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாம். இதனாலேயே காங்கிரஸ் கட்சியில் சேரும் முடிவை பிரசாந்த் கிஷோர் கைவிட்டார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
2024 லோக்சபா தேர்தலுக்கான அணிதிரட்டும் முயற்சிகளில் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகளை மட்டும் ஒருங்கிணைத்தால் போதும் என்கிற முயற்சியை மே.வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் முன்னெடுக்கின்றனர். ஆனால் காங்கிரஸையும் மாநில கட்சிகளையும் உள்ளடக்கிய மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பது தேசியவாத காங். தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் கருத்து. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதே நிலைப்பாட்டில் இருக்கிறார்.
இந்நிலையில் எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு விழிபிதுங்கி கிடக்கும் காங்கிரஸ் தம்மை உயிர்ப்பித்துக் கொள்வதில் படுமும்முரமாக இருக்கிறது. ராஜஸ்தானில் மாநில நிர்வாகிகள் கூட்டம், கட்சி சீரமைப்புக்கு கமிட்டிகள் என கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் மேலிடம் சீரியசாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புகளுக்கு இடையே தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸில் இணைவார் என்கிற பேச்சுகளும் எழுந்தன.

காங்கிரஸில் பி.கே.இல்லை
இந்நிலையில் திடீரென தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் 2023 சட்டசபை தேர்தல் தொடர்பாக ஒப்பந்தம் போட்டது. இது காங்கிரஸில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸில் தாம் சேரப் போவது இல்லை; காங்கிரஸுக்கு இப்போது தேவை தலைமை மாற்றம்தான் என பொளேரான கூறிவிட்டார் பிரசாந்த் கிஷோர். இதனால் காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணைவார் என்கிற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பி.கே. நிபந்தனை
இது தொடர்பாக டெல்லி வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, பிரசாந்த் கிஷோர் முன்வைத்த 4 முக்கிய நிபந்தனைகளை காங்கிரஸ் மேலிடத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால்தான் பிரசாந்த் கிஷோர் திட்டங்களுக்கு நோ சொல்லிவிட்டது காங். மேலிடம்.இதுதான் இருதரப்புக்குமான பிரச்சனை என்றனர். அதாவது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தகவல் தொடர்புகள் அனைத்தும் தமது குழுவிடம்தான் இருக்க வேண்டும்; குறிப்பாக யாருக்கு போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்பதெல்லாம் தங்களது குழுவிடம் இருக்க வேண்டும் என நிபந்தனைவிதித்தது பிரசாந்த் கிஷோர் தரப்பு. ஆனால் காரிய கமிட்டி, மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஆகியவற்றை ஓரம் கட்டுகிற வகையில் பிரசாந்த் கிஷோர் டீம் வந்துவிடும் என சொல்லி நிராகரித்திருக்கிறது காங். மேலிடம்.

மாநில கூட்டணி பேச்சுவார்த்தை
அதேபோல், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் மட்டுமே பிரசாந்த் கிஷோர் அறிக்கை தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் தம்மால் அமைக்கப்பட்ட சீரமைப்பு குழுவிடம்தான் பிரசாந்த் கிஷோர் அறிக்கை தர வேண்டும் என சொல்லி இருக்கிறது காங். மேலிடம். மாநில கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் பிரசாந்த் கிஷோர் குழுவே மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்படி செய்யும் போது மாநில கமிட்டிகள் கடும் அதிருப்தி அடையும் என்கிற கருத்தை காங். மேலிடம் தெரிவித்திருக்கிறது.
Recommended Video

ஒன்லி லோக்சபா தேர்தல்
அத்துடன் 2024 லோக்சபா தேர்தல் குறித்து மட்டுமே தாங்கள் கவனம் செலுத்துவோம்; இதர மாநில தேர்தல்கள் குறித்து கவலைப்பட மாட்டோம் என்று சொல்லி இருக்கிறது பிரசாந்த் கிஷோர் தரப்பு. இதனை முற்று முழுதாக நிராகரித்துவிட்டது காங்கிரஸ் மேலிடம். இதனால்தான் பிரசாந்த் கிஷோர், காங்கிரசில் இணைய மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications