பஞ்சாப் விவகாரம்: 'நீங்களே முடிவெடுத்தால், அப்புறம் நாங்க எதுக்கு?'. மத்திய அரசை விளாசிய நீதிபதிகள்
டெல்லி: பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்ட விவகாரத்தில் மாநில அதிகாரிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விரும்பினால், உச்சநீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா கேள்வி எழுப்பினார்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். மோசமான வானிலை காரணமாக பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லாமல் சாலை மார்க்கமாக காரில் சென்றார்.
5 மாநில சட்டசபைத் தேர்தல்: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்டது பிரதமர் மோடி புகைப்படம்
பாதுகாப்பு குளறுபடி
விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் பதிண்டா என்ற இடத்தின் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது. அந்த வாகனத்தால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை.
இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி என்வி ரமணா
பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேர்ந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே விசராணை நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்த விசாரணையில் மத்திய அரசு பஞ்சாப் அரசு மீது குற்றம்சாட்டி வாதங்களை முன்வைத்தது. பஞ்சாப் அரசும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறியது. இந்த நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
மாநில அரசு மீது குற்றச்சாட்டு
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பஞ்சாப் அரசை கடுமையாக குற்றம்சாட்டினார். SPG சட்டத்தின் தெளிவான மீறல் நடந்துள்ளது. இது முழுமையான உளவுத்துறை தோல்வி . அந்த சாலையில் போராட்டக்காரர்கள் இருப்பதாக பிரதமரின் பாதுகாப்புத் துறைக்கு, மாநில அரசு எந்தத் தகவலையும் வழங்கவில்லை என்று கூறினார்.
மத்திய அரசு மீது பஞ்சாப் புகார்
இந்த தவறுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை மாநில அரசு பாதுகாப்பதால் மத்திய அரசு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய பஞ்சாப் அரசின் வழக்கறிஞர் டிஎஸ் பட்வாலியா, '' இந்த விவகாரத்தில் மத்திய அரசு எங்களுக்கு எதிராக அனைத்தையும் முன்னெடுத்துச் செல்கிறது. பஞ்சாப் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி வெறும் 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது.நியாயமான விசாரணையை நான் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று கூறினார்.
நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
மத்திய அரசின் இந்த செயலுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா கடும் கண்டனம் தெரிவித்தார். மாநில அதிகாரிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விரும்பினால், இந்த நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்? என்று என்.வி ரமணா கேள்வி எழுப்பினார். ''இந்த விஷயம் நாட்டின் பிரதமர் பாதுகாப்பு பற்றியது. நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற எண்ணத்தில் இருக்க வேண்டாம்'' என்றும் மத்திய அரசிடம் தலைமை நீதிபதி கூறினார்.
விசாரணைக்கு எதிராக இருக்க முடியாது
இதேபோல் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி, ''அதிகாரிகளை குற்றவாளிகளாக காட்டி, நெருக்கடி கொடுப்பது யார்? நியாயமான விசாரணைக்கு நீங்கள் எதிராக இருக்க முடியாது'' என்று கூறினார்கள். பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது பற்றி விசாரிக்க நான்கு பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.