‛‛காரணம் இதுதான்’’.. லோக்சபாவில் ‛ஸ்பிரே’ அடித்தது ஏன்? கைதானவர்கள் கூறிய பரபர வாக்குமூலம்.. ஷாக்
டெல்லி: பாதுகாப்பு அரண்களை உடைத்து லோக்சபா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து ‛ஸ்பிரே' அடித்து எம்பிக்களை அச்சுறுத்தியது தொடர்பாக மொத்தம் 5 பேர் ‛உபா' சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் அவர்கள் அப்படி ஏன் செய்தார்கள்? பின்னணி என்ன? என்பது பற்றி பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று மதியம் 1 மணியளவில் நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற ஸ்பிரே அடித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதையடுத்து எம்பிக்கள் 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியேவும் பெண் உள்பட 2 பேர் ஸ்பிரே அடித்து பரபரப்பை கிளப்பினர். இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் டெல்லி போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படை பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் லோக்சபாவுக்குள் நுழைந்து ஸ்பிரே அடித்தவர்களின் பெயர்கள் சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் (வயது 35) என்பதும், நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பிரே அடித்தது ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த 2 பேர் எஸ்கேப்பானதும் தெரியவந்தது. இதில் ஒருவர் சிக்கி உள்ள நிலையில் இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதானவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் தான் கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவர்கள் ஏன் லோக்சபா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் ‛ஸ்பிரே' அடித்தனர் என்பது பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கைதானவர்கள் அனைவரும் 4 ஆண்டுகளாக சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினமே அவர்கள் நாடாளுமன்றம் வந்து உளவு பார்ப்பது போல் பார்த்து சென்றுள்ளனர். விசாரணையின்போது அரசின் கவனத்தை ஈர்க்கவே இப்படி செய்ததாக தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் வன்முறை, வேலைவாய்ப்பின்மை மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட நிலையில் இதுபோன்ற விஷயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் மோடி பேச வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து எம்பிக்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் ஸ்பிரே பயன்படுத்தி உள்ளனர்.
அதோடு தாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை எனவும், தனித்தனியாக இருந்த நாங்கள் ஒன்றிணைந்து இதனை செய்தோம்'' எனவும் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் மீது போலீசாருக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. இதனால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications