நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு பாடம் கற்பிப்போம் - ஈரானிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் உறுதி
டெல்லி: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்போம் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அவதூறாக பேசியதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று இந்தியா வந்தார்.
இருநாட்டு உறவுகள், வர்த்தக தொடர்பாக பேச இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் ஆமிர் அப்துல்லாஹைன் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு.. பாஜக அரசியல்வாதிகளுக்கு
அஜித் தோவல் உறுதி
இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஈரான் அரசு வெளியிட்டு இருக்கும் தகவலில், அஜித் தோவல் உடனான சந்திப்பின்போது, பாஜக பிரமுகர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் தொடர்பாக அவதூறாக பேசியது குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அவரிடம், "நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்போம்" என அஜித் தோவல் உறுதியளித்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறு
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.
வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.
கான்பூரில் கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.
இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.