நிர்பயாவை நினைவூட்டும் பயங்கரம்.. ரயில் நிலையத்தில் ஊழியர்களால் பெண் பலாத்காரம்! தலைநகரில் தலைகுனிவு
டெல்லி: ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்களால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கணவனை விட்டு பிரிந்த 30 வயது பெண் ஒருவருக்கும் டெல்லி ரயில் நிலையத்தில் மின் பராமரிப்பு ஊழியராக இருக்கும் நபருக்கும் நண்பர் மூலமாக பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
அந்த பெண்ணுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி நம்பிக்கை அளித்து இருக்கிறார் ரயில்வேயில் பணிபுரியும் அந்த நபர். இதன் மூலம் இருவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பிறந்தநாள் அழைப்பு
இந்த நிலையில் நேற்று முந்தினம் தனது மகனுக்கு பிறந்தநாள் என்றும், தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு வருமாறும் பெண்ணுக்கு அந்த நபர் அழைப்பு விடுத்து இருக்கிறார். இதனை நம்பி அந்த பெண் இரவு 10 மணியளவில் கீர்த்திநகர் மெட்ரோ ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கு வந்த அவர், அப்பெண்ணை அழைத்துக் கொண்டு தான் பணிபுரியும் ரயில் நிலையத்துக்கு சென்று இருக்கிறார்.

கூட்டு பலாத்காரம்
அங்கு அந்த பெண்ணை மின் பராமரிப்பாளர்களின் ஓய்வு அறையில் அமர்ந்து இருக்கும்படி அந்த நபர் கூறியுள்ளார். இதை நம்பிய பெண் ஓய்வு அறையில் இருந்தபோது, அந்த நபர் ரயில்வேயில் பணிபுரியும் 3 பேருடன் அங்கு வந்து அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர். பெண்ணுடன் பழகிய நபரும், அவரது நண்பரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய அதை யாரும் பார்த்துவிடாத வகையில் 2 பேர் வெளியில் காவல் காத்துள்ளனர்.

போலீசாரிடம் புகார்
இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்த நடைமேடையில் பெண்ணை விட்டுவிட்டு 4 பேரும் தப்பிச்சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை கண்ட மற்ற ரயில்வே ஊழியர்கள் மீட்டு விசாரித்தனர். அவர்களிடம் தனக்கு நேர்ந்த பயங்கரத்தை கூறி இருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண். இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகாரளித்தனர்.

4 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பலாத்காரம் செய்த 2 பேர் மற்றும் காவலுக்கு நின்ற 2 பேர் என 4 ரயில்வே ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லி பேருந்தில் நிர்பயா என்ற பெண் பலரால் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், தற்போது அதை நினைவுபடுத்தும் வகையில் ரயில் நிலையத்தில் இந்த பயங்கரம் அரங்கேறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications