பெண்கள் தினம்: எக்ஸ், இன்ஸ்டா தளத்தை மார்ச் 8-ல் பெண்கள் மட்டும் பயன்படுத்த அனுமதி தந்த பிரதமர் மோடி
டெல்லி: சர்வதேச மகளிர் தினமான (சர்வதேச பெண்கள் தினம்) மார்ச் 8-ந் தேதியன்று தமது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கங்களை பெண்கள் பயன்படுத்த அனுமதி அளிக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது மன்கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இது குறித்து கூறியதாவது: மார்ச் 8ஆம் தேதியன்று நாம் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இது நமது பெண்சக்தியைப் போற்றும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம் ஆகும். தேவி மகாத்மியத்திலே, வித்யா: சமஸ்தா: தவ தேவி பேதா: ஸ்த்ரிய: சமஸ்தா: சகலா ஜகத்ஸு என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அனைத்துக் கல்விகளும், தேவியின் பல்வேறு ரூபங்களின் வெளிப்பாடுகள், பேருலகின் அனைத்து பெண்சக்திகளும் கூட தேவியின் வடிவங்களே. நமது கலாச்சாரத்தில் பெண்களுக்கு மரியாதை செலுத்துவது தலையாயதாகக் கருதப்படுகிறது. தேசத்தின் தாய்மை சக்தியானது நமது சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பிலும் கூட பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறது.

இந்த முறை பெண்கள் தினத்தன்று நான் ஒரு முன்னெடுப்பைச் செய்ய இருக்கிறேன், இதை நமது பெண்சக்திக்கு அர்ப்பணிப்பாகச் செய்ய இருக்கிறேன். இந்த சிறப்பான சந்தர்ப்பத்திலே, என்னுடைய சமூக ஊடகக் கணக்கான எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில், உத்வேகம் தரும் தேசத்தின் சில பெண்களுக்கு ஒரு நாளை அர்ப்பணிக்க இருக்கிறேன். இப்படிப்பட்ட பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், புதுமைகள் படைத்திருக்கிறார்கள், பல்வேறு துறைகளில் தங்களுடைய தனித்துவ அடையாளங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று இவர்கள் தங்களுடைய பணிகள், அனுபவங்களை நாட்டுமக்களோடு பகிர்ந்து கொள்வார்கள். தளம் வேண்டுமானால் என்னுடையதாக இருக்கலாம், ஆனால் அங்கே அவர்களுடைய அனுபவங்கள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அவர்கள் படைத்த சாதனைகள் பற்றியே பேச்சு இருக்கும். இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கும் வாய்க்க வேண்டும் என்று நீங்களும் விரும்பினால், நமோ செயலியில் உருவாக்கப்பட்டிருக்கும் சிறப்பான மன்றம் வாயிலாக, இந்தச் செயல்பாட்டில் அங்கம் வகிக்கலாம், என்னுடைய எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து உலகம் முழுக்கவும், உங்களுடைய கருத்தைக் கொண்டு சேர்க்கலாம். வாருங்கள், இந்த முறை பெண்கள் தினத்தன்று நாமனைவரும் இணைந்து மகத்தான பெண்சக்தியைக் கொண்டாடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications