அதிக கொரோனா கேஸ்கள்... 1.35 கோடி வைரஸ் பாதிப்புடன்... இரண்டாம் இடத்தில் இந்தியா
டெல்லி: உலகில் கொரோனா காரணமாக மிகவும் மோமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பிரேசில் நாட்டில் இதுவரை 1,34,82,543 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் 1,35,25,364 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உலகெங்கும் கொரோனா தாக்கம் மிகவும் மோசமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு ஏழு லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்பும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளன.
கொரோனா பாதிப்பு
உலகெங்கும் கடந்த 24 மணி நேரத்தில் 7,04,500 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதிப்பு 13,66,13,721ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்பும் கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 10,545 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா உயிரிழப்பும் 29,48,824 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உச்சம்
கொரோனா பரவல் இந்தியாவில் தற்போது உச்சத்தில் உள்ளது. நேற்று மட்டும் 1,69,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் மட்டும் 1,35,25,364 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. உலகில் கொரோனா காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்பும் 900ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 1,70,209 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 12,01,456 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக நாடுகள்
பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவில் 47,635 பேருக்கும் துருக்கி நாட்டில் 50,678 பேருக்கும் பிரான்ஸ் நாட்டில் 26,051 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 3,19,18,362ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் இதுவரை 1,34,82,543 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு
நேற்று மட்டும் பிரேசில் நாட்டில் சிகிச்சை பலனிற்றி 1,824 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று போலந்தில் 749 பேரும் அமெரிக்காவில் 702 பேரும் ரஷ்யாவில் 402 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகெங்கும் 10,545 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா உயிரிழப்பு 29,41,151 ஆக அதிகரித்துள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
உலகெங்கும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் தற்போது கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட டாப் 10 நாடுகளில் ஐந்து நாடுகள் ஐரோப்பியாவை சேர்ந்தவை. மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இரண்டு நாடுகளும், அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்த இரண்டு நாடுகளும் உள்ளன. ஆசியக் கண்டத்தில் இருந்து இந்தியா மட்டும் இதில் உள்ளது