நடுத்தர மக்களுக்கு நிவாரணம்.. நிர்மலாவிடம் நெட்டிசன் வைத்த கோரிக்கை.. சட்டென கொடுத்த ரியாக்ஷன்
டெல்லி: நாட்டின் சில்லறை பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ள சூழலில், நடுத்தர வர்க்கத்தினருக்கு கொஞ்சம் நிவாரணம் கொடுங்கள் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் கோரிக்கை வைத்து இருந்தார். இந்த கோரிக்கைக்கு உடனடியாக நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரிச்சுமையை விதித்து இருப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை கடுமையாக சாடி வருகிறார். பெரும் பணக்காரர்களுக்காகவே இந்த அரசு செயல்படுவதகாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

ஜி.எஸ்.டி போன்ற வரி விதிப்பு முறையால் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சிகளால் அதிகம் முன்வைக்கப்படுட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நெட்டிசன் ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு, அவர் உடனடியாக ரியாக்ட் செய்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில் ராமாயணம் தொடர்பான ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த பதிவுக்கு கீழே துஷார் சர்மா என்பவர், நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தார். அதில், “நமது நாட்டிற்கு நீங்கள் ஆற்றும் பங்களிப்பு, எடுக்கும் முயற்சிகளை பாராட்டுகிறோம். நடுத்தர வர்க்கத்தினருக்கு கொஞ்சம் நிவாரணம் கொடுங்கள். நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
இதில் உள்ள கடுமையான சவால்களை புரிந்துகொள்கிறேன். இருந்தாலும் மனப்பூர்வமாக இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்"என்று பதிவிட்டு இருந்தார். துஷார் என்பவரின் இந்த கோரிக்கை குறித்து உடனடியாக பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "உங்களின் கனிவான வார்த்தைகளுக்கும் புரிதலுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் அக்கறையை நான் பாராட்டுகிறேன்.
பிரதமர் மோடி அரசு பொறுப்பு மிக்க அரசு. மக்களின் குரலை கேட்க கூடியது. உங்கள் கருத்து மதிப்புமிக்கது. உங்களுடைய புரிதலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். நாட்டின் சில்லறை பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவாக 6.21 சதவீதம் உயர்ந்தது. ரிசர்வ் வங்கி நிர்ணயித்த உச்ச வரம்பை தாண்டி பணவீக்கம் சென்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் 6.83 ஆக இருந்தது. அதன்பிறகு இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பது இதுவே முதல் முறையாகும். சில்லறை பணவீக்கம் கடுமையாக உயர்ந்து இருப்பது நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படும் நிலையில், நிர்மலா சீதாராமனிடம் இத்தகைய கோரிக்கையை துஷார் மேத்தா என்ற நெட்டிசன் முன்வைத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications