நாடே உற்றுநோக்கும் ஜனாதிபதி தேர்தல் - மோதும் முன்னாள் ஆசிரியர்கள் - இருவருக்கும் இவ்ளோ ஒற்றுமையா?
டெல்லி: இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி இன்று நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்
எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுகிறார்.

யஷ்வந்த் சின்ஹா VS திரௌபதி முர்மு
யஷ்வந்த் சின்ஹாவுக்கும் திரௌபதி முர்முவுக்கும் இடையே பல வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் உள்ளன. பீகாரில் பிறந்தவரான யஷ்வந்த் சின்ஹா முன்னேறிய வகுப்பை சேர்ந்தவராவார். அதே சமயம், ஒடிசா மாநிலத்தின் பின்தங்கிய பகுதியிலிருந்து வந்த திரௌபதி முர்மு ஒரு பழங்குடியின பெண். இதன் காரணமாக பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது பாஜகவின் திட்டம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்
அதே நேரம் இருவருமே ஆசிரியர்களாகவும், அரசு பணியாளர்களாகவும் இருந்தவர்கள். பாட்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று 24 ஆண்டுகள் பல்வேறு அரசு பதவிகளில் அங்கம் வகித்தவர். திரௌபதி முர்முவை பொறுத்தவரை பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றியவர். அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர்.

யஷ்வந்த் சின்ஹாவின் அரசியல் பயணம்
அதேபோல் இருவருமே அரசுப் பணியிலிருந்து விலகி அரசியலுக்கு சென்றவர்கள். யஷ்வந்த் சின்ஹா 1986 ஆம் ஆண்டு பாஜகவில் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய நிதியமைச்சராகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. மோடி - அமித்ஷா மீதான அதிருப்தியால் அக்கட்சியிலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா திரிணாமூல் காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

திரௌபதி முர்முவின் அரசியல் பயணம்
பாஜகவை சேர்ந்த திரௌபதி முர்முவும் கடந்த 2000 வது ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக பதவியேற்றார். ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார். அதன் பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications