பிரியாணி கடைக்குள் கொலை.. வெளியான ஷாக் சிசிடிவி.. தங்கையை காதலித்ததால் போட்டு தள்ளிய சகோதரர்கள்
தருமபுரி: பிரியாணி கடைக்குள் வைத்து 4 பேர் கொண்ட கும்பல் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை தாக்கி படுகொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதைபதைக்க செய்தது. இந்த நிலையில், தங்கையை காதலித்ததால் இரட்டை சகோதரர்கள் நண்பர்களுடன் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தருமபுரியை சேர்ந்தவர் ஜாபித். இவரது மகன் முகமது ஆசிக். இவர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிதாக திறக்கப்பட்ட தொப்பி வாப்பா பிரியாணி கடையில் கிரில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரும் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த சித்தா பெண் மருத்துவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இருவரும் வேறு வேறு மதம் என்பதாலும், பெண் டாக்டராக இருப்பதனாலும், இளைஞர் கிரில் மாஸ்டராக இருப்பதாலும் இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்ந்துள்ளனர். எனினும் இருவரும் ஆசைப்பட்டு விட்டதால் பெண் வீட்டாருக்கு முகமது ஆசிக்கின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களது காதல் விஷயம் குறித்து பேசியுள்ளனர்.
அப்போது பெண் வீட்டார் கடும் கோபத்துடனும், தகாத வார்த்தைகளால் திட்டியும் அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் வழக்கம் போல் முகமது ஆசிக் பிரியாணி கடையில் வேலை பார்த்துகொண்டு இருக்கும் போது நைசாக அழைத்து 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் இரும்பு கம்பியால் அடித்து தாக்கியுள்ளனர்.

இதில் முகமது ஆசிக் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து அந்த கும்பலினர் அங்கிருந்து தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த முகமது ஆசிக்கை கடை ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதனையில் முகமது ஆசிக் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக முகம்மது ஆசிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது. அதில், கிரில் மாஸ்டர் முகம்மது ஆசிக்கை ஒருவர் தனியாக வரும்படி அழைக்கிறார். அதன்பேரில் சென்ற முகமது ஆசிக்கிடம் நாற்காலியில் உட்காருமாறு அவர் கூறுகிறார். அப்போது இன்னொரு நபர் அங்கிருந்து வந்து எதிர்பாராத நேரத்தில் கத்தியை எடுத்து குத்த முயற்சிக்கிறார்.
இதனை சுதாரித்துக்கொண்ட முகமது ஆசிக் அங்கிருந்து தப்பி ஓடமுயற்சித்தார். ஆனால் மேலும் இரண்டு பேர் இரும்பு கம்பி, கத்தியுடன் ஓடி வந்து அணை கட்டினர். 4 பேரும் சுத்து போட்டு தாங்கள் வைத்திருந்த கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சராமாரியாக தாக்குகின்றனர். இதில் அப்படியே முகமது ஆசிக் சரிந்து விழுந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்லும் வீடியோ பதிவாகியிருந்தது.
சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட எஸ்பி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் சம்பவம் நடந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் முகமது ஆசிக் காதலித்த பெண் மருத்துவரின் இரட்டை சகோதரர்களான ஜனப்பிரியனும், ஜன அம்சப்பிரியனும் தான் நண்பர்களுடன் சேர்ந்து முகமது ஆசிக்கை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications