திராவிட ஆட்சி இது.. புரோகிதர் பூஜை செய்வதா? பொது நிகழ்ச்சியில் திமுக எம்.பி.செந்தில் குமார் ஆவேசம்
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏரி புனரமைக்கும் பணியின்போது பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆவேசமாக பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்தியாவில் அண்மைக் காலமாக எந்த அரசு நிகழ்ச்சிகளோ அல்லது கட்டடத்திற்கான பூமி பூஜைகளோ தொடங்கி வைக்கப்பட்டால், இந்து முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் தேசிய சின்னத்தை பொறுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, இந்து முறைப்படி பூஜைகள் செய்தார். இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.
ஓராண்டு திமுக ஆட்சியில் ரூ.3,000 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு புதிய தகவல்!
பூமி பூஜை
இந்து முறைப்படி மட்டும் செய்யப்படும் பூஜைகளால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பாதுகாப்பில்லாத உணர்வு ஏற்பாடுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் அதிமுக ஆட்சியில் பூமி பூஜைகள் உள்ளிட்ட சம்பிரதாயங்கள் இந்து முறைப்படி செய்யப்பட்டு வந்தன. அதேபோல் ஆயுத பூஜை என்ற பெயரில் இந்து பண்டிகைகள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொண்டாடப்பட்டு வந்தது.
திமுக ஆட்சி
இந்த நிலையில் திமுக ஆட்சியிலும் பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் ரூ.1.38 லட்சம் மதிப்பீட்டில் ஏரியை புனரமைக்கும் பணி தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடங்கி வைக்க தர்மபுரி மாவட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அழைக்கப்பட்டிருந்தார்.
கொந்தளித்த திமுக எம்பி
அப்போது பொதுப்பணித் துறை சார்பில் பூமி பூஜை செய்ய புரோகிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டு தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் உள்ளிட்ட தீபாராதனை பொருட்களை வைத்திருந்தனர். இதனைக்கண்ட தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பொதுப் பணித்துறை அதிகாரியை அழைத்து இது திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியில் நடைபெறும் அரசு விழாவில் இதுபோன்ற சம்பிரதாயங்கள் செய்யக்கூடாது என்று உங்களுக்கு தெரியாதா, விதிமுறைகள் வழங்கவில்லையா என ஆவேசமாக கேட்டார்.
மன்னிப்பு கேட்ட அதிகாரி
இதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் இது அனைவருக்குமான ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, ஒரு மதத்தினரை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்துவது தவறு. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தெரிவித்தார். இல்லையென்றால் நடத்த தேவை இல்லை என்று அறிவுறுத்தினார். பின்பு அனைத்து சம்பிரதாய பொருட்களும் அகற்றப்பட்டு, ஏரியை சீரமைக்கு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தொடங்கி வைத்தார்.