4 முறை வென்ற பாமக கோட்டை தருமபுரியில் சவுமியா அன்புமணி! அப்பா, கணவரை போல எம்.பி.யாவாரா?
தருமபுரி: லோக்சபா தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) 4 முறை வென்ற தருமபுரி (தர்மபுரி) தொகுதியில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி இம்முறை களம் காண்கிறார். இதனால் தருமபுரி தொகுதியும் விபிஐ தொகுதியாக மாறி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் தொடங்கிய போது தமது குடும்பத்தில் இருந்து எவர் ஒருவரும் கட்சிக்கு வரமாட்டார்கள் என வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் காலப் போக்கில் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ், பாமகவின் எதிர்காலமாக அடையாளப்படுத்தப்பட்டார். அன்புமணி ராமதாஸ் தேர்தல் களம் கண்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.

தற்போது அன்புமணி ராமதாஸ், ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். பாஜக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் பாமகவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும்; அன்புமணி ராமதாஸ் மீண்டும் மத்திய அமைச்சராவார் என்பது பாமகவினரின் கனவு.
இந்த நிலையில் தற்போதைய லோக்சபா தேர்தலிலு பாமக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. பாமகவுக்கு மொத்தம் 10 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது பாஜக. இதில் தருமபுரி தொகுதியும் ஒன்று. தருமபுரி தொகுதியில் பாமகவின் அரசாங்கம் என்பவர் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது டாக்டர் ராமதாஸின் மருமகளும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். சவுமியாவின் தந்தை- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்- முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி.
தருமபுரி லோக்சபா தொகுதியை பாமகவின் கோட்டை என்றுதான் சொல்ல வேண்டும். 1977-ம் ஆண்டு தருமபுரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி. 1980-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக வென்றது; 1984-ல் அதிமுகவின் தற்போதைய மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை வென்று எம்பியானார். 1989-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் அதிமுகதான் வென்றது.
1991-ல் காங்கிரஸ் 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் வென்ற தருமபுரி தொகுதி இதன் பின்னர் பாமகவின் கோட்டையாகவே உருமாறியது. 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து தருமபுரி தொகுதியில் பாமக வெற்றி வாகை சூடியது. 2009-ல் திமுக வென்ற போது 2014-ல் தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு இழந்த வெற்றியை மீட்டெடுத்தார். அதே நேரத்தில் 2019-ல் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரிடம் அன்புமணி ராமதாஸ் தோல்வியைத் தழுவினார்.
தருமபுரி லோக்சபா தொகுதியில் 4 முறை பாமக வென்றுள்ளது. அத்தொகுதியில் அதிக முறை வென்ற ஒரே கட்சி பாமகதான். திமுக, காங்கிரஸ் கட்சிகள்தலா 3 முறையும் அதிமுக 2 முறையும் வென்றுள்ளன.
தருமபுரி தொகுதியின் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
திமுக டாக்டர் செந்தில்குமார்- 5,74,988 (47.01%)
பாமக டாக்டர் அன்புமணி ராமதாஸ் 5,04,235 (41.22%)
இப்பின்னணியில்தான் தற்போது முனைவர் சவுமியா அன்புமணி பாமகவின் வேட்பாளராக தருமபுரி தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார் தந்தை கிருஷ்ணசாமி, கணவர் அன்புமணி ராமதாஸ் போலவே சவுமியா அன்புமணியும் லோக்சபா எம்பியாவாரா?என்கிற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் பாமக தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications