முகத்த பாக்க முடியலையே..கதறித் துடித்த உறவினர்கள்! நரபலி கொடுக்கப்பட்ட பத்மா உடல் சொந்த ஊரில் தகனம்!
தருமபுரி : கேரளாவில் கொடூரமாக வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்மாவின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கின்போது, பத்மாவின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
பத்மாவின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததால், டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதனால் அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
நரபலி கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பத்மாவின் உடல் டி.என்.ஏ பரிசோதனைக்கு பிறகு நேற்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் நரபலி கொடுக்கப்பட்டு பத்மா, ரோஸ்லி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். 2 பேரும் எப்படி நரபலி கொடுக்கப்பட்டார்கள் என்பது குறித்த பகீர் கிளப்பும் தகவல்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
56 துண்டுகளான ரோஸ்லின்.. 5 துண்டுகளான பத்மா.. குங்குமம் பூசப்பட்ட பை.. வெலவெலக்கும் கேரளா நரபலி
தருமபுரி பத்மா
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்மா உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த பத்மா, கடந்த செப்டம்பர் மாதம் மாயமானார். இதுதொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல கொச்சி காலடி பகுதியைச் சேர்ந்த ரோஸ்லி என்ற 50 வயது பெண்ணும் காணாமல் போனதாக சில மாதங்களுக்கு முன்பு புகார் வந்தது.
நரபலி
இந்த இரண்டு புகார்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது காணாமல் போன இருவரின் செல்போன் சிக்னல்களும் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடுத்த இலந்தூர் பகுதியைச் சேர்ந்த பகவல்சிங், லைலா ஆகிய தம்பதியினரின் வீட்டில் கடைசியாக இருந்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பத்மா மற்றும் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ரோஸ்லியும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
மூட நம்பிக்கை
பகவல்சிங், லைலா இருவரையும் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் பகவல் சிங்கிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த மந்திரவாதியான ஷாபிக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே நெருக்கமான ஷாபி, பகவல்சிங்கின் வீட்டில் ஒரு பெண்ணை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் உடல் வலிமை பெற்று ஆயுள் கூடும் என அவரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பகவல்சிங் தம்பதியினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
உடல் பாகங்களை சமைத்து
அப்போதுதான் பத்மாவை அணுகிய ஷாபி, பணத்தாசை காட்டி பகவல் சிங்கின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கட்டிலின் மீது படுக்க வைத்து கை கால்களை கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்து ரத்தத்தை அறை முழுவதும் தெளித்து விடிய விடிய பூஜை நடத்தியுள்ளனர். உடலின் தலைப்பகுதியில் காளியின் போட்டோ விளக்கு மற்றும் பொருட்களை வைத்து இந்த பூஜையை நடத்தி உள்ளனர். மேலும் ஒரு சில உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும் என தெரிவித்ததன் பேரில் பகவல்சிங், லைலா தம்பதியினர் மனித மாமிசத்தை சமைத்து உட்கொண்டு உடல் பாகங்களை வீட்டின் அருகேயே புதைத்துள்ளனர்.
உலுக்கிய சம்பவம்
இந்த இரண்டு பெண்களும் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம், மனித மாமிசத்தை சமைத்து உண்ட சம்பவம் இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதைத்தொடர்ந்து 2 பேரின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி, சடலத்தைக் கைப்பற்றினர். பத்மா மற்றும் ரோஸ்லியின் உடல் பாகங்கள் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. உடல் பாகங்களை ஒன்றாக சேர்த்து வைத்து பரிசோதனை நடத்தப்பட்டது.
உடல் தகனம்
பத்மாவின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததாலும் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாலும் சொந்த ஊருக்கு கொண்டு வர கால தாமதமானது. இறுதி கட்ட விசாரணை மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து பத்மாவின் உடல் பாகங்கள் பத்மாவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு செய்து தகனம் செய்யப்பட்டது. உயிரிழந்த பத்மாவின் உடல் சிதைந்திருந்தால் பத்மாவின் முகத்தைக் காண முடியாமல், குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.