20 ஆண்டு காத்திருப்புக்கு பின் உருவான கரு.. 6 மாதத்தில் அதிர்ச்சி - கைகொடுத்த மருத்துவர்கள்!
தருமபுரி: பென்னாகரத்தில் ஐந்தரை மாதத்தில் 600 கிராம் எடையில் பிறந்த குழந்தை 2 மாதம் ஐ.சி.யு. சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளது.
பென்னாகரத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மங்களம்மாளுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இருக்கிறது.
ஆனால், குழந்தை இல்லாமல் பல்வேறு துயரங்களை இந்த தம்பதி அனுபவித்து வந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை எடுத்தும் பயன் கிடைக்கவில்லை.

20 ஆண்டு கனவு நனவானது
இந்த நிலையில், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெறுவதற்காக முடிவு செய்தனர். இந்த சிகிச்சை வெற்றியடைந்ததை அடுத்து இத்தனை ஆண்டு காத்திருப்புக்கு பின் நமக்கு ஒரு குழந்தை வரப்போகிறது என்று மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து இருந்தனர் மாதேஷ் - மங்களம்மாள் தம்பதி.

ஐந்தரை மாதத்தில் அதிர்ச்சி
ஆனால், 24 வாரங்களில் காத்திருந்தது அதிர்ச்சி. வெறும் 600 கிராம் எடையுடன் ஐந்தரை மாதத்தில் தனியார் மருத்துவமனையில் தம்பதிக்கு குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை ஜி.ஆர்.பி. நியூபார்ன் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு நுரையீரலில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

உயிர் பிழைத்த குழந்தை
இதற்காக நைட்ரிக் ஆக்சைடு வாயு மூலம் 4 நாட்கள் வெண்டிலேட்டரிலும் 2 மாதம் ஐசியுவில் குழந்தை வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் தொடர் முயற்சியின் காரணமாக 600 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் எடை 1.7 கிலோவாக அதிகரித்து உள்ளது. இதனால் மாதேஷ் - மங்களம்மாள் தம்பதி ஆறுதல் பெருமூச்சு விட்டுள்ளனர்.

மருத்துவரின் மகத்தான சேவை
குழந்தையின் பெற்றோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதால் பல்வேறு தரப்பினரிடம் ரூ.3 லட்சம் நிதி வசூலித்து சிகிச்சையளித்த மருத்துவர் பூபதிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய அவர், "எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை நவீன மருத்துவத்தின் உதவியுடன் நம்மால் காப்பாற்ற முடியும். இந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் எந்த உடல்நல பாதிப்பும் இருக்காது." என்றார்.












Click it and Unblock the Notifications