மயானத்திற்கு பாதை.. உயர்நீதிமன்றத்தை நாடி தீர்வு பெற்ற கிராமம்.. நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலை வசதி அமைக்கக் கோரிய வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மயானத்திற்கு சாலை அமைக்க ஆதி திராவிட நலத்துறை சிறப்பு தாசில்தார்க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் ஜருகு மானியதஹள்ளி கிராமத்தில் நீண்ட காலமாக கண்மணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இவர்களுக்கான போக்குவரத்து வசதி என்பது ஒரு கி.மீக்கு முன்னரே முடிந்துவிடும். பெரும்பாலான கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இவ்வாறுதான் இருக்கும் நிலையில் இந்த கிராமத்தில் இக்குறிபிட்ட ஒரு கி.மீ தொலைவிலான சாலை என்பது முற்றிலும் பயணத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து தொடர்ந்து புகார் கூறி வந்திருக்கின்றனர். இந்த சாலை பள்ளமும் மேடுமாக இருப்பதால் இந்த வழியாக பயணிப்போர் பலர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மயானத்திற்கான பாதை பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இந்த பாதையும் மிக மோசமாக இருப்பதாலும், பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும் பிணத்தை முறையாக சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.
உரிமையியல் வழக்கு தொடுப்பது அடிப்படை உரிமை.. யாராலும் பறிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
பாதை
அப்படி மீறி கொண்டு செல்லும்போதெல்லாம் பிணம் சாலையில் தவறி விழுந்துவிடும் அவலம் பலமுறை நிகழ்ந்திருக்கிறது என்றும் இதனால் அந்த வழியாக பயணிக்காமல் வேறு வழியாக மயானத்திற்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த பிரச்னை குறித்து கிராம மக்கள் மேலும் கூறியதாவது, "இப்படி நாங்கள் மாற்று பாதையை பயன்படுத்தினாலும் சிக்கல் பல எழுந்திருக்கிறது. வேறு பாதையில் பயணிக்கும்போது தனி நபருக்க சொந்தமான வயல்களை கடக்க நேரிடுகிறது. இந்த தனிநபர்கள் பெரும்பாலும் வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஒவ்வொரு முறை ஊரில் இறப்பு நிகழும்போது சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டிருக்கிறது. எனவே மயானத்திற்கு பாதை வேண்டும்" என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சரின் தனி பிரிவில் கடந்த மே 6ம் தேதி கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார்கள்.
விசாரணை
மட்டுமல்லாது துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் மனு சென்றிருக்கிறது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இக்கிராமத்தை சேர்ந்த கண்மணி என்பவர் தாங்கள் அனுப்பிய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 15ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து அரசு சார்பில் விளக்கம் அளிக்கக்கோரி விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தீர்ப்பு
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பில் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை வசதி அமைக்க வேண்டும் என்று ஆதி திராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கிராம மக்கள் வரவேற்றிருக்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில் இந்த மயானத்திற்கு மட்டும் தற்போது நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் இதே மாவட்டத்தில் பல கிராமங்களில் மயானத்திற்கு செல்ல முறையான பாதை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தீர்வு
தருமபுரி மட்டுமல்லாது தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் மயான பாதை பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. பல கிராமங்களில் மாயான பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இது தொடர்பாக ஒவ்வொரு கிராம மக்களும் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பை பெறுவது என்பது சவாலான காரியம் என்றும், எனவே அரசு இந்த பிரச்னையில் தலையீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.