நாட்டு வெடிகுண்டு வெடித்து திண்டுக்கல் அருகே 2 இளைஞர்கள் பலி.. சட்டவிரோத வெடி தயாரித்தபோது விபரீதம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராசு மகன் ராஜா (25) மற்றும் முருகன் மகன் கருப்பையா (32). இவர்கள் இருவரும் அரவங்குறிச்சி பகுதியில் உள்ள மாந்தோட்டம் ஒன்றில் திருவிழா மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்காக அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் ராஜா மற்றும் கருப்பையா இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு அனுமதியின்றி பட்டாசு வெடி தயாரித்தது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வெடி தயாரித்த 2 பேர் வெடி விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications