நாட்டாமை..முதல் மரியாதை! பதவி ஆசையில் பறிபோன உயிர்! திமுக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் ட்விஸ்ட்..!
திண்டுக்கல் : கள்ளச்சந்தையில் மதுவிற்க மதுபாட்டில்களோடு சென்ற திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர்கள் 2 பேர் உள்பட 7 பேர் போலீசாரல் கைது செய்யப்பட்டனர். கோவில் பிரச்சனையில் மரியாதை கிடைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக அவரை தீர்த்து கட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திண்டுக்கல் அடியனுத்து பஞ்சாயத்திற்குட்பட்ட யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (வயது 60). இவர் திண்டுக்கல்லை அடுத்துள்ள வேடப்பட்டியில் வசித்து வந்தார். இவர் திமுக பிரமுகராகவும், அடியனூத்து ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.

இவரது மனைவி நிர்மலா. இவரும் முன்னாள் அடியனூத்து ஊராட்சி தலைவராக இருந்தார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் நிர்மலா இறந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மாயாண்டி ஜோசப், யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்துகிறார்.
திமுக பிரமுகர்: மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் மற்ற 2 பிள்ளைைைகளும் வெளியூரில் படிக்கின்றனர். இந்நிலையில் மாயாண்டி ஜோசப், மட்டும் தனியாக வேடப்பட்டியில் வசிக்கிறார். இதற்கிடையே இரண்டு நாட்களுக்கு முன் இரவு மாயாண்டி ஜோசப், யாகப்பன் பட்டியில் உள்ள தனது பாரிலிருந்து டூவீலரில் வேடப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்றார். வாகனத்தில் அடுத்த நாள் காலையில் ப்ளாக்கில் விற்பனை செய்வதற்காக 3 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தன.
கொடூர கொலை: இந்நிலையில் அவர் செல்லும் வழியில் அவரது வருகைக்காக முன்னரே காத்திருந்த மர்ம கும்பல் எதிர் திசையில் டூவீலரில் வந்து மாயாண்டி ஜோசப், மீது மோதினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாயாண்டி ஜோசப்பை, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பியது. குறிப்பாக அவரது தலையை சிதைத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சில்லிங் சரக்கு.. திமுக பிரமுகர்.! ரத்த சகதியில் மாண்ட மாயாண்டி! காத்திருந்து கருவறுத்த கும்பல்..!
கொலையாளிகள் கைது: மேலும் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார் மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது மாயாண்டி ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் திண்டுக்கல் சிறுமலை பிரிவு மற்றும் தோமையார்புரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த 7 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
உறவினருக்கு தொடர்பு: பின்னர் அவர்களை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ் (39),டேனியல் ராஜா (20) அலெக்ஸ்பிரிட்டோ (20) கண்ணார் பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் (19),பிரவீன் குமார் (19) என்பதும்,14, 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதில் பிடிபட்ட சேசுராஜ் என்பவர் மாயாண்டி ஜோசப்பின் உறவினர் ஆவார்.
நாட்டாமை பதவி: இந்த நிலையில் யாகப்பன்பட்டியில் சேசுராஜ் நாட்டாமையாக இருந்து மாதா கோவில் திருவிழாவை தலைமை தாங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 3 வருட திருவிழாவின் போது சரிவர கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை எனக் கூறி சேசுராஜ் நாட்டாமை பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு மிக முக்கிய காரணம் மாயாண்டி ஜோசப் என சேசுராஜ் நினைத்தார். இதனால் அவ்வப்போது அவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டு வந்தது. மேலும் இவர் இருந்தால் நமக்கு ஊரில் மரியாதை கிடைக்காது.
கொலை திட்டம்: இந்த ஊரில் மீண்டும் நாம் மரியாதையோடு வாழ வேண்டும் என நினைத்தால் மாயாண்டி ஜோசப்பை தீர்த்து கட்ட வேண்டும் என அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சேசுராஜ் திட்டமிட்டுள்ளார். அதன்படி யாகப்பன் பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மாயாண்டி ஜோசப் வந்தபோது அவரை சேசுராஜ் ஆதரவாளர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி ஓடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.
அதிரடி கைது: இதையடுத்து சேசுராஜ், டேனியல் ராஜா, அலெக்ஸ் பிரிட்டோ,காளீஸ்வரன்,பிரவீன் குமார் ஆகிய 5 பேரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.சிறுவர்கள் 14, 17 வயதுடைய 2 பேரை போலீசார் கைது செய்து மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 அரிவாள்கள், 3 கத்திகள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஸ்டாலின், கென்னடி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications