தினுசு தினுசா.. திண்டுக்கல்லில் 'பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள்'- கூலி தொழிலாளிக்கு சரமாரி கத்தி குத்து!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை முயற்சி, கொலைகள் தொடரும் நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கூலி தொழிலாளியை சரமாரியாக கத்தியால் குத்தி கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அச்சமூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. திண்டுக்கல் திமுக பிரமுகர்கள் மீரான் பாய், விஜயராஜ் ஆகியோர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டப்பட்டனர்.

கொலை முயற்சி 5 பேர் கைது
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக முன்னாள் பெண் கவுன்சிலரின் கணவர், மகன் உள்ளிட்ட 5 பேர் சிக்கி உள்ளனர்.

நிர்மலா தலை துண்டிப்பு- 3 பேர் கைது
இதனைத் தொடர்ந்து தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது தலை துண்டிக்கப்பட்டு 1 கி.மீ. தொலைவில் உள்ள நந்தவனப்படி பசுபதி பாண்டியன் வீடு முன்பாக போடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமந்தராயன் கோட்டை கொலை
திண்டுக்கல் நிர்மலா தேவி கொல்லப்பட்ட நேற்று முன்தினம் இரவு அனுமந்தர்ராயன் கோட்டை ஸ்டீபன் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது தலையும் துண்டிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் வீசப்பட்டது. அவரது உடலை மட்டப்பாறை அருகே கொலையாளிகள் வீசி சென்றனர். இப்படி திண்டுக்கல் மாவட்டமே கொலைகளின் நகரமாகுகிறதோ என பொதுமக்கள் அச்சப்படும் வகையில் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றனர்.

பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள்
இந்நிலையில்தான் பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள் கூலி தொழிலாளி ஒருவரை பரபரப்பாக இருக்கும் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே கத்தியால் குத்தி கொள்ளையடிக்க முயன்றிருக்கின்றனர். புதுக்கோட்டை பொன்னமராவதியை சேர்ந்த ஹோட்டல் கூலி தொழிலாளி முத்து கணேசன் (34). வேடசந்தூரில் ஹோட்டல் ஒன்றில் வேலையை முடித்துவிட்டு பொன்னமராவதி செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு நேற்று வந்துள்ளார். முத்துகணேஷ் செல்லக் கூடிய பொன்னமராவதி பேருந்து வர தாமதம் ஏற்பட்டதால் அவர் பேருந்துக்காக காத்திருந்தார். இதனை நோட்டமிட்ட பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள், அவரை சரமாரியாக கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்றுள்ளனர். முத்துகணேஷ் தான் வைத்திருந்த செல்போன் மற்றும் உடைகளை அப்படியே போட்டுவிட்டு உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் பஸ் ஸ்டாண்ட் கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓட்டம் பிடித்தனர். மேலும் படுகாயங்களுடன் முத்துகணேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications