திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயரில் தானமாகப் பத்திரம் பதிந்து பட்டா வாங்கியுள்ளார். பின்னர் மின் இணப்பு பெறுவதற்காக அடங்கல் மற்றும் சான்று கேட்டு பள்ளப்பட்டி கிராம நிர்வாக பெண் அதிகாரியான சத்யாவிடம் விண்ணப்பித்துள்ளார். அவரிடம் 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசாமி என்பவருடைய மகன் குமாருக்கு 44 வயது ஆகிறது. இவர் விவசாயி ஆவார். குமார் தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தைத் தனது பெயரில் தானமாகப் பத்திரம் பதிந்து பட்டா வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக அடங்கல் மற்றும் சான்று கேட்டு பள்ளப்பட்டி கிராம நிர்வாக அதிகாரியான வத்தலக்குண்டுவைச் சேர்ந்த 56 வயதாகும் சத்யா என்பவரிடம் மனு அளித்துள்ளார்.

அப்போது அவரிடம், கிராம நிர்வாக அதிகாரி சத்யா ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மார்ச் 18ம் தேதி புகார் கொடுத்தார். இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தைக் குமார் பெற்றுக்கொண்டு பள்ளப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்..
அப்போது அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சத்யாவிடம் ரூ.4 ஆயிரத்தைக் குமார் கொடுத்தார். ஆனால் சத்யா அந்தப் பணத்தை வாங்காமல் அங்கிருந்த பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவரிடம் கொடுக்குமாறு கூறினாராம். அதன்படி அவரிடம், குமார் லஞ்சப்பணத்தைக் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நாகராஜன், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் சத்யா, சாந்தகுமாரைக் கையும், களவுமாகப் பிடித்தனர். பின்னர் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அதிகாரி சத்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தகுமார் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் கொடைரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக கைதானால், அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒருவரைக் கையும் களவுமாகப் பிடித்தால், அவரை உடனடியாகக் கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். வழக்கமாக, ஆரம்பகட்ட விசாரணைக்காக அவர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார். எனவே, கைது செய்யப்பட்ட அன்றே ஜாமீன் கிடைப்பது மிகக் கடினமாகிவிடும்.
விசாரணையின் போத லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், "விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது, இவரை வெளியே விட்டால் சாட்சிகளைக் கலைக்கவோ அல்லது ஆவணங்களை அழிக்கவோ வாய்ப்புள்ளது" என்று பலமான எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இது 'ஊழல் தடுப்புச் சட்டத்தின்' கீழ் வருவதால், சாதாரண வழக்குகளை விட நீதிமன்றம் இதில் அதிகக் கவனம் செலுத்தும். பொதுவாக 15 முதல் 30 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகுதான் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் நிபந்தனைகளின் அடிப்படையில் அமையலாம். அதுவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டிய நிலை வரலாம். மேலும் அவர் அந்த அலுவலகத்திற்குச் செல்லக் கூடாது, சாட்சிகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
ஜாமீன் கிடைப்பதைத் தாண்டி, ஒரு அரசு ஊழியர் லஞ்ச வழக்கில் கைதானால் சில சிக்கல்களும் வரும். ஒரு அரசு ஊழியர் 48 மணி நேரத்திற்கு மேல் சிறையில் இருந்தால், அவர் தானாகவே பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படுவார். அத்துடன் அந்த வழக்கு முடியும் வரை (பல ஆண்டுகள் ஆகலாம்) அவருக்குப் பதவி உயர்வு, பணிப்பலன்கள் எதுவும் கிடைக்காது. பணி ஓய்வு பெறும் வயதில் ஒருவர் கைதானால், அவரது ஓய்வூதியப் பலன்கள் நிறுத்தி வைக்கப்படும். இப்படி பலருக்கும் நடந்துள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications