நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு கை பார்ப்போம்..! களம் இறங்க தயாராகும் விஜய் ரசிகர்கள்…?
திண்டுக்கல்: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, பாமக,நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிட்டனர். நடிகர் விஜய் நேரடியாக வேட்பாளர்களுக்கு பிரச்சாரமோ அல்லது முறையான ஆதரவு அறிக்கையோ வெளியிட நிலையில், அவர் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்க கொடியுடன் நிர்வாகிகள் வேட்புமனு மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேர்தலின் முடிவில் பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் போட்டியிட்ட 169 பேரில் 129 பேர் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியானது. அவ்வப்போது அரசியல் புயலில் சிக்கி வந்த விஜய்யின் இந்த திடீர் நகர்வு மூத்த கட்சிகளையே வியப்பில் ஆழ்த்தியது. இருந்தும் விஜய் சம்மதத்துடன் தான் இவர்கள் அனைவரும் போட்டியிட்டனரா? என்ற கேள்வியும் எழுந்தது..
இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை பனையூரில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, அவர்களோடு ஓரு ஓரமாக அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதையடுத்து விஜயின் சம்மதத்துடன் தான் தேர்தலில் அவரது இயக்கத்தினர் போட்டியிட்டது உறுதியானதோடு, வருங்காலத்தில் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் ஆருடங்கள் வெளிவந்தன.
இந்நிலையில் 9 மாவட்டங்களில் கிடைத்த வெற்றியைக் கொண்டு அடுத்ததாக தமிழகத்தில் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் காண தயாராகி வருகின்றனர்..திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பழனியில் மாவட்ட இளைஞரணி தலைவர் தர்மா தலைமையில் நடைபெற்றது. இதில் பழனியில் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் எந்தெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது குறித்தும், களப்பணியாளர்கள் தயார் செய்வது, இயக்கத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது..
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.. என்ன இருந்தாலும் இந்தத் தேர்தலில் ஒரு கை பார்த்து விடுவோம் என களம் இறங்கியுள்ள விஜய் மக்கள் இயக்கத்தினரால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது