திண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு நாற்காலிகளை வீசும் அளவுக்கு ரகளை சென்றுவிட்டது. இவை அனைத்தும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்பு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை வகித்து பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை பார்த்து கூட்டுறவு சங்க தேர்தலில் முக்கியமானவர்களுக்கு பதவி கொடுத்து விடுகிறீர்கள், சத்துணவு துறையில் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை கிடைத்து விடுகிறது.
ஆனால் கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. நாங்கள் வேலை செய்வதற்கு மட்டும்தானா? எங்களுக்கு பதவிகள் கிடைக்காதா? என பேச தொடங்கினார்.
உடனே மருதராஜ், இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். ஏதேனும் பேச வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறலாம் என தெரிவித்தார்.
[அதிமுகவினருக்கு ஒரு நற்செய்தி.. நாளை முதல் நியூஸ் ஜெ.. ஒளிபரப்பை தொடங்குகிறது!]
இருந்தபோதும் அவர் தொடர்ந்து பேசியவாரே இருந்தார். அவரை மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் நாற்காலிகளை வீசி மோதிக் கொண்டனர். உடனடியாக தகராறில் ஈடுபட்டவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கூட்டம் அமைதியாக நடந்தது.
இவை அனைத்தும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்பு நடந்தது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications