நடுக்காட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட மக்கள்? திமுக வேட்பாளரின் ப்ளானா? ஆத்திரத்தில் அதிமுகவினர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மலை அடிவாரத்தில் பொதுமக்களை பேருந்துகள், வேன்களில் அழைத்து வந்து பிரியாணி விருந்து கொடுக்க திமுக நத்தம் வேட்பாளர் முயன்ற நிலையில், தகவல் அறிந்து அதிமுகவினர் அதே பகுதியில் திரண்டதால் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் மலை மாதா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள தனியார் தோட்டங்களில் ஏராளமான பொதுமக்களை திமுகவினர் அடைத்து வைத்திருப்பதாக புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து மலை மாதா கோவில் அமைந்துள்ள பகுதியில் அதிமுகவினர் திரண்டனர். அங்குள்ள தோட்டங்களிலும் தகர செட்டுகளிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மேலும் ஒவ்வொரு நபருக்கும் 500 வழங்கி மாலை வரை இதே இடத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று திமுகவினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அங்கிருந்த திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் கோவில் வளாகத்தில் இருந்த பங்குத்தந்தையுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீங்கள் தான் தகவல் கொடுத்து அதிமுகவினரை வரச் செய்தீர்களா என பங்கு தந்தையை மிரட்டிய திமுகவினர். தகவல் அறிந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் இரு தரப்பினரையும் சமரசம் செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த பொது மக்களை மீட்டு அவர்கள் வருகை புரிந்த வாகனத்திலேயே ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இன்று நத்தம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதனின் பிரச்சாரத்திற்கு ஆட்கள்கூட்டம் கூட கூடாது என்பதற்காக திமுகவினர் வாக்காளர்களை இங்கு தங்க வைத்திருப்பது தெரிய வந்தது.
கடந்த தேர்தல்களில் கரூர் மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இதுபோல பட்டியில் பொதுமக்கள் அடைத்து வைத்திருக்கும் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களை தடுத்து வைத்திருப்பது களத்தில் உள்ள வேட்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications