பழனி மலை ஏறிய அண்ணாமலை.. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துள்ள நிலையில் குடும்பத்தினருடன் வழிபாடு!
திண்டுக்கல்: லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இன்று பழனியில் வழிபாடு மேற்கொண்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை.
கடந்த 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து தமிழக பாஜக மாநில தலைவரும்,கோவை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அண்ணாமலை, கர்நாடகா, கேரளாவுக்குச் சென்று சில தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த 25ஆம் தேதி வருகை புரிந்து பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுத்தார். கொடைக்கானலில் எந்தவொரு பாஜக நிர்வாகிகளையும் அண்ணாமலை சந்திக்கவில்லை.
கடந்த பல மாதங்களாக, “என் மண் என் மக்கள்” யாத்திரை, அதைத்தொடர்ந்து தீவிரமாக லோக்சபா தேர்தல் பிரச்சாரம் என படு பிஸியாக இருந்த அண்ணாமலை, கொடைக்கானலில் குடும்பத்தினருடன் 3 நாட்கள் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றாக உள்ள பூம்பாறை மலைக்கிராமத்தில் 3000 ஆண்டு பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் நிறைவடைந்த பின்பு கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அண்ணாமலையுன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அங்கிருந்து பழனிக்கு புறப்பட்டார் அண்ணாமலை.
தொடர்ந்து, பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் இன்று தரிசனம் மேற்கொண்டார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு வந்த அண்ணாமலையை, பாஜக நிர்வாகிகள் வரவேற்று கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
தனது குடும்பத்தினருடன் ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்குச் சென்று பாலதண்டாயுதபாணியை தரிசனம் செய்தார் அண்ணாமலை. அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, போகர் சித்தர் சன்னிதிக்குச் சென்று வணங்கினார். தொடர்ந்து, ரோப் கார் வழியாகவே அடிவாரத்திற்கு இறங்கினார்.
பழனியில் அண்ணாமலையை பார்த்த ஏராளமான பொதுமக்கள், அவருடன் செல்ஃபி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, பழனியில் இருந்து காரில் கிளம்பி கோவைக்குச் சென்றார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications