24 மணி நேரமும் மதுபானக் கூடம்.. குற்றம் சாட்டி வீடியோ எடுத்த திண்டுக்கல் மாவட்ட பாஜக நிர்வாகி கைது
திண்டுக்கல்: 24 மணி நேரமும் மதுபானக் கூடம் செயல்படுவதாக வீடியோ எடுத்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜை போலீசார் கைது செய்துள்ளனர். கொடைக்கானல் சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கனகராஜை போலீசார் கைது செய்தனர். தனியார் மதுபான கூடத்துக்குள் அத்துமீறி நுழைந்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக கனகராஜ் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 24 மணி நேரமும் தனியார் மதுபானக் கூடம் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். 9 மணிக்கே மதுபான பார் செயல்படுவதாக வீடியோ பதிவு செய்து வெளியிட்டு இருந்தார்.

திண்டுக்கல் பாஜக தலைவர் கைது
இந்த நிலையில், தனியார் மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, மாணவிக்கு நீதி கேட்டு பாஜக மகளிரணியினர் பழனியில் இருந்து மதுரைக்கு பேரணி செல்வதாக இருந்தது. அப்போது பேரணி சென்ற பாஜக மகளிரணியினரை கைது செய்து போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அப்போது அருகில் தனியார் மதுபான கூடம் இருந்துள்ளது. அப்போது அங்கு வந்த கனகராஜ், அந்த மதுபான கூடத்திற்கு 50 பெண்களை அழைத்து சென்றதாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. தனியார் மதுபான கூடத்துக்குள் அத்துமீறி நுழைந்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை கண்டனம்
கொடைக்கானல் சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கனகராஜை போலீசார் கைது செய்தனர். பழனி - கொடைக்கானல் சாலையில் உள்ள அய்யம்புள்ளி சோதனைச் சாவடியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பழனி டவுன் காவல்துறையினர் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கனகராஜ் கைது சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அரணாகச் செயல்பட வேண்டிய திமுக அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும், திமுகவின் ஒரு பிரிவு போல் செயல்படாமல் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சாராய வியாபாரிகளுக்கு அரணாக திமுக
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- தனியார் மதுக்கடையைக் காலை 8 மணிக்கே திறந்து வைத்து மது விற்பனை செய்ததை பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் பழனி கனகராஜ், ஊடகங்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தியதற்காக அவரை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இன்று அவசர அவசரமாகக் கைது செய்திருக்கிறார்கள். இந்த கைது சம்பவம் வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களுக்கு அரணாகச் செயல்பட வேண்டிய திமுக அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகக் காவல்துறையும் திமுகவின் ஒரு பிரிவு போல் செயல்படாமல் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கைது செய்யப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் திரு பழனி கனகராஜை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications