காய்கறி விற்கும் அதிமுக மேயர் வேட்பாளர்..“குப்பை” அள்ளும் கோடீஸ்வர குடும்ப வாரிசு.. திண்டுக்கல் கலகல
திண்டுக்கல்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காய்கறி விற்பது, மம்பட்டி கடப்பாரையோடு குப்பை அள்ளுவது என சட்டமன்ற தேர்தலுக்கு இணையாக கலக்கி வருகின்றனர் திண்டுக்கல் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்.
Recommended Video
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி பழனி கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் நகராட்சி கிடைக்கப்பெற்ற திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில் அதிமுக தமாக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடுகிறது. திண்டுக்கல் அதிமுக மேயர் வேட்பாளராக முன்னாள் மேயர் மருதராஜின் மகள் பொன்முத்து என்பவரும், திமுக மேயர் வேட்பாளராக கருதப்படும் இந்திராணி என்பவரும் களமிறங்கி பலப்பரிட்சை நடத்தி வருகின்றனர். யாரும் எதிர்பாராத வகையில் திண்டுக்கல்லில் மெகா கோடீஸ்வரர் லயன் ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் என்பவரும் களத்தில் இறங்கி அரசியல் கட்சியினருக்கு இணையாக வாக்கு சேகரித்து வருகிறார்.

அதிமுக பொன்முத்து
திண்டுக்கல் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் சட்ட மன்றத் தேர்தல்களை மிஞ்சும் அளவுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர் வேட்பாளர்கள். அதிமுக சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளராக கருதப்படும் முன்னாள் மேயர் மருதராஜ் மகள் பொன்முத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். அவரது சகோதரரான பிரேம்குமார் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் நிலையில் இருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த பொன்முத்து காய்கறி விற்பவரிடம் வாக்கு சேகரித்தார் அப்போது தானே விற்பனையாளராக மாறி பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

குப்பை அள்ளும் “கோடீஸ்வரர்”
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 17வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடுகிறார் திண்டுக்கல் மணல் புகழ் ரத்தினம் என்பவரது மகன் வெங்கடேஷ். கோடீஸ்வர குடும்பத்திலிருந்து முதல்முறையாக திடீரென களத்தில் இறங்கி சுயேட்சையாக போட்டியிடுகின்றார். இன்று காலை வார்டுக்குட்பட்ட ரெங்கநாயகி நகரில் உள்ள மாம்பழ நாயுடு சந்தில் பிரசாரம் செய்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள், நீண்டகாலமாக சாக்கடை சேதமடைந்துள்ளது, நீங்கள் வெற்றி பெற்றால் உடனடியாக இதை சீரமைத்து கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். உடனடியாக 3 கேமராக்கள், ஒரு மம்பட்டியோடு களத்தில் இறங்கிய வெங்கடேஷ், குப்பைகளை சுத்தம் செய்தார்.

வார்டு மக்கள் அதிர்ச்சி
இத்தனை நாள் இதே வார்டுக்குள் இருந்தபோது எட்டிக் கூட பார்க்காத வேட்பாளர்கள் திடீரென சமூக சேவகர்களாகவும், குப்பை அள்ளுபவர்களாகவும் மாறியதால் மக்களே சற்று அதிர்ச்சியடைந்துதான் போயுள்ளார்கள். நம்மிடம் பேசிய வாக்காளர் ஒருவர், தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், தங்கள் பகுதிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தங்களை "நன்கு கவனித்து" கொள்வதாகவும், காலை மாலை என இருவேலைகளிலும் " துண்டு பிரசுரங்களை" கொடுத்து வாக்கு சேகரிப்பதாகவும் கூறிகின்றனர். ஆனால் இதுபோன்ற பழைய காலத்து டெக்னிக்குகளை ஐடியா என்ற பெயரில் கொடுப்பது யார் என்பதுதான் தெரியவில்லை என நகைச்சுவையாக கூறி புறப்பட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications