“உள்ளூரில் விலை போகாத மாடு..” நயினார் நாகேந்திரனை சொல்கிறாரா அண்ணாமலை? சிபிஎம் கேள்வி
திண்டுக்கல்: இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையும் நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல்லில் பரப்புரை மேற்கொண்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பழனி சட்டமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளரை 'உள்ளூரில் விலை போகாத மாடு' என விமர்சித்திருந்தார். தற்போது சிபிஎம் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது.
திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம், இந்த முறை 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் பழனி சட்டமன்ற தொகுதியும் ஒன்று. இங்கு வேட்பாளராக பாண்டி களமிறக்கப்பட்டிருக்கிறார். நேற்று திண்டுக்கல்லில் என்டிஏ கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்த அண்ணாமலை, சிபிஎம் வேட்பாளரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

"உள்ளூர் மாடு சந்தையில் விலை போகவில்லை எனில், அதை வெளியூர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பார்கள். அப்படித்தான் திண்டுக்கல்லிருந்து பிரித்துக்கொண்டு வந்து, பழனியில் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சி வரலாறு காணாத தோல்வியடையும்" என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர், மதுக்கூர் ராமலிங்கம், "எனக்கு என்னவோ அண்ணாமலை, சிபிஎம் வேட்பாளர் பாண்டியை பற்றி சொன்னதாக நான் நினைக்கவில்லை. இவருக்கு சீட்டு கொடுக்க விடாத நயினார் நாகேந்திரன் கடந்தமுறை திருநெல்வேலியில் களமிறங்கினார். இப்போது சாத்தூரில் போட்டியிடுகிறார். ஒருவேளை அவரைதான் உள்ளூர் மாடு, வெளியூர் மாடு என்று சொல்கிறாரோ?
இல்லையெனில், இவருடைய பாஸ் ஒருவர் இருக்கிறாரே.. பிரதமர் நரேந்திர மோடி, அவரது சொந்த மாநிலம் குஜராத். ஆனால், வாரணாசியில் போட்டியிட்டிருந்தார். ஒருவேளை அவரை சொல்கிறாரா என தெரியவில்லை.
வானதி சீனிவாசன் கடந்த முறை கோவை தெற்கில் நின்றார். இந்தமுறை கோவை வடக்கில் நிற்கிறார். எங்கள் வேட்பாளரை உள்ளூர் மாடு, வெளியூர் மாடு என்கிறாரே! அவங்க கட்சியில சில பேர் சந்தைக்கே வராத மாடாக இருக்கிறார்கள். நிர்மலா சீதாராமன் இதுவரை எத்தனை தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகியிருக்கிறார்? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எந்த தேர்தலில் போட்டியிட்டு அமைச்சரானார்?
சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, அண்ணாமலைதான் பாவம் அடி மாடு போல ஆகிவிட்டார். இவர் உள்ளூர் மாடு, வெளியூர் மாடு என்று சொல்கிறார் இல்லையா? கடந்த முறை இவரது சொந்த தொகுதியில் கரூர் அரவக்குறிச்சியில் போட்டியிட்டார். இந்த முறை கோவை பக்கம் சீட் கேட்டு பார்த்தார். அது கிடைக்காத பின்னணியில், அவரை பிரச்சார குழுவில் கூட போடவில்லை. தனது அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை, அதனால்தான் வரவில்லை என்று சொன்னார். இப்போது பிரச்சாரத்தில் பங்கேற்று வருகிறார்.
ஒரே மாவட்டத்திற்கு உள்ளேயே, உள்ளூர் வெளியூர் என பேசுவது, ஒரு பக்கம் அகண்ட பாரதம் என்று பேசுவது, இன்னொரு பக்கம் அண்டாவுக்கு உள்ளே கையை விட்டு ஆட்டுவது ரொம்பவும் வேடிக்கையாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications