கூட்டணியில் குறுக்கே கட்டையைப் போடும் மாணிக்கம் தாகூர்.. அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த ரிப்ளை!
திண்டுக்கல்: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், கூட்டணி கட்சியான திமுகவை விமர்சித்து வரும் நிலையில், அதனை கண்டிக்கும் வகையில் அமைச்சர் ஐ. பெரியசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அகரம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டடத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாகியும், திமுக தங்களுடன் பேச முன்வரவில்லை என்ற ரீதியில் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்திருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஐ. பெரியசாமி, "இது போன்று தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. நாங்கள் கட்டுப்பாடு நிறைந்த இயக்கத்தில் வளர்ந்தவர்கள். ஒருவரின் கருத்து என்பது அவர் சார்ந்த கட்சிக்கும், அதன் தலைமைக்கும் உடன்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், மாணிக்கம் தாகூர் தினம் ஒரு அறிக்கை விடுகிறார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால், அதற்கு பதில் அளிக்கலாம்.
தனிப்பட்ட நபர்களின் கருத்துக்குப் பதில் சொல்வது நியாயமாகப்படவில்லை. காரணம் என்னவென்றால் நான் ஒரு கட்சியின் அமைச்சராக இருக்கிறேன். எனது அருகில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-யாக சச்சிதானந்தம் இருக்கிறார். எனக்கும், என்னுடன் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி-க்கும் கட்சிக் கட்டுப்பாடு உள்ளது. நாங்கள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவர்கள். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும்.
திமுக கூட்டணி பலமாக உள்ளது. இடதுசாரி இயக்கம், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நம்முடன் உள்ளனர். அதே சமயம், யார் கூட்டணிக்கு வந்தாலும், அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுக்கப்போவதில்லை. அதுகுறித்து நிச்சயம் அவர் நல்ல முடிவை எடுப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "காங்கிரஸ் தரப்பில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக குழு அமைத்து 36 நாட்கள் ஆகிறது. ஆனால், திமுக இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். தோழமைக் கட்சிகளை காங்கிரஸ் எப்போதும் விமர்சிக்காது" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications