"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை
திண்டுக்கல்: ''நீங்கள் எல்லாம் ஒக்கலிகர் கவுண்டர்கள். ஆனால் அடுத்த முதலமைச்சராக வர இருப்பவர் கொங்கு வேளாளர் கவுண்டர். தமிழ்நாட்டை ஒரு கவுண்டர் ஆளப்போகிறார். அது மகிழ்ச்சியான செய்தி. நாம் அத்தனை பேரும் அதற்காக உழைக்க வேண்டும்'' என்று ஜாதியை குறிப்பிட்டு திண்டுக்கல் அதிமுக வேட்பாளரான திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். இவர் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வருகிறார்.

திண்டுக்கல்லில் 4 முறை எம்பியாக இருந்த இவர் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் கடந்த 2016, 2021 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சீனிவாசன் VS அமைச்சர் மகன்
இப்போது மீண்டும் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன் களமிறங்கி உள்ளார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ஐபி செந்தில்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தற்போதைய அமைச்சர் ஐபி பெரியசாமியின் மகன் ஆவார். திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் செந்தில்குமார் தொகுதி மாறி திண்டுக்கல்லில் களமிறங்கி உள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம்
இதனால் இந்த முறை திண்டுக்கல் தொகுதியில் போட்டி கடுமையாக உள்ளது. திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஐபி செந்தில்குமார் ஆகியோர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
யார் வெல்வார்கள்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் திண்டுக்கல் மாவட்டம் காப்பிலியப்பட்டியில் நேற்று இரவு அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
ஜாதி சொல்லி வாக்கு சேகரிப்பு
அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பிரசார வாகனத்தில் நின்று பேசியபடி வாக்கு சேகரித்தார். இந்த சமயத்தில் ஜாதியை சொல்லி அவர் தனக்கு ஓட்டளிக்கும்படி கூறினார். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். அவரை முதலமைச்சராக்க எனக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று கூறினார்.
இதுதொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ''நீங்கள் (பொதுமக்கள்) எல்லாம் ஒக்கலிகர் கவுண்டர்கள். ஆனால் அடுத்த முதலமைச்சராக வர இருப்பவர் கொங்கு வேளாளர் கவுண்டர். தமிழ்நாட்டை ஒரு கவுண்டர் ஆளப்போகிறார். அது மகிழ்ச்சியான செய்தி. நாம் அத்தனை பேரும் அதற்காக உழைக்க வேண்டும்.
வீடியோவால் சர்ச்சை
ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு பழனிச்சாமி கவுண்டர் (எடப்பாடி பழனிச்சாமி) முதலமைச்சராக இருந்து ஆட்சியை நடத்தி காண்பித்தார். ஸ்டாலினின் கொடுமையான ஆட்சியை மாற்றி நல்லாச்சி தருவதற்கு இரட்டை இலை சின்னத்தில் எனக்கு ஓட்டளிக்க வேண்டும்'' என்று கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் விதிமீறல் புகார்
பொதுவாக தேர்தல் பிரசாரத்தின்போது ஜாதி, மதத்தை குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. அப்படி செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறும் செயலாகும். ஆனால் திண்டுக்கல் சீனிவாசன் தனது பிரசாரத்தின்போது ஜாதியை குறிப்பிட்டு பேசி உள்ளார். இதனால் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் நடத்தை விதியை மீறிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications