ஆத்தூரில் கைநீட்டிய விஏஓ.. கதவுக்கு பின்னால் காத்திருந்த ட்விஸ்ட்! இப்போ வேலை போய்.. மானமும் போச்சு!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய, ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது, மணலூர் கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக பிடிபட்டார். கைது செய்யப்பட்ட, அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த காலங்களில் அதாவது 1970, 80 காலகட்டங்களில் நாட்டாமை, மணியக்காரர் முறைதான் இருந்தது. ஒரு கிராமத்தில் நல்லது கெட்டதுகளுக்கு அவர்களிடம் தான் கையெழுத்து பெற வேண்டும். அதனால் பல முறைகேடுகள் நடைபெற்றது.
இதனை ஒழிக்கும் விதமாக கிராம நிர்வாக அலுவலர் பதவியை கொண்டு வந்தார் எம்ஜிஆர். அதற்கு பிறகு அரசு தேர்வு எழுதினால் தான் அதில் வெற்றி பெற முடியும் எனவும் மாற்றப்பட்டது. இப்படியாக மக்களுக்காக கொண்டுவரப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர்பவர்கள் தொடர்ந்து முறைகேடுகளில் சிக்கி சிறை செல்வது வாழ்க்கையாகி வருகிறது.

லஞ்ச ஒழிப்பு சோதனை
கிராம மக்களின் அடிப்படையான பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கு கிராம நிர்வாக அலுவலர் தான் முதலில் கையெழுத்திட வேண்டும். பின்பு அது வருவாய் ஆய்வாளர் மூலம் அனுப்பப்பட்டு தாசில்தார் மூலம் மேற்கண்ட சான்றிதழ்கள் வழங்கப்படும். இவற்றின் முதலில் கையெழுத்து போடுவதற்கு 5000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வருவாய் துறை அதிகாரிகளை குறிவைத்து தொடர் சோதனை நடத்தி வருகிறது.
திண்டுக்கல் சம்பவம்
இதில் இதுவரை ஏராளமானோர் ஒரு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது .ஆனாலும் பணத்தாசை பிடித்த அதிகாரிகள் திருந்தியபாடில்லை அப்படி பணத்தாசையால் சிக்கி இருக்கிறார் திண்டுக்கல்லை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஒருவர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, அய்யம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா (45) என்பவர், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள தனது 6 ஏக்கர் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார்.
கிராம நிர்வாக அலுவலர் கைது
இந்நிலையில், வத்தலகுண்டு அருகே உள்ள, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், மணலூர் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். அவரிடம் பட்டா பெயர் மாறுதல் செய்வதற்காக இளையராஜாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத இளையராஜா இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, ரூபா கீதாராணி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர்.
மணலூர் வி.ஏ.ஓ
அப்போது, ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் முருகன், லஞ்சப் பணத்தை இளையராஜாவிடம் இருந்து வாங்கும் போது, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மணலூர் கிராம நிர்வாக அலுவலர் முருகனை, ஆத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஒரு தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம் பல்வேறு ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் பரபரப்பு
ஆத்தூர் தாலுகாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் புகாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மணலூர் கிராம நிர்வாக அலுவலர் முருகன் ரூபாய் 10 ஆயிரம் வஞ்சம் பெற்று கையும் களவுமாக பிடிபட்டு, கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications