EXCLUSIVE : விளம்பரத்துக்கு வேலை இல்லை..கட்சிக்கு உழைத்தவர்களுக்குத்தான் பதவி..சாட்டை எடுத்த ஐ.பி..!
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் புதிதாக வந்தவர்களுக்கு பதவி தரும் எண்ணம் இல்லை எனவும், கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு மட்டுமே நகராட்சி மற்றும் மாநகராட்சி தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படும் என திமுக மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளதால் திண்டுக்கல்லில் மேயர் கனவில் வந்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள இருபத்தி ஒரு மாநகராட்சிகளையும் பெரும்பாலான நகராட்சி பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே கைப்பற்றின.

திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன . குறிப்பாக மாநகராட்சியை கைப்பற்ற தேவையான 25இடங்களுக்கும் 5 இடங்கள் கூடுதலாக அதாவது 30 வார்டுகளில் திமுக தனித்தே வென்றுள்ளது. திமுக 30 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

தலைமைப் பதவி
இதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், பழனி ஆகிய நகராட்சிகள் திமுக கைப்பற்றியுள்ளது. மேலும் நத்தம், வடமதுரை உள்ளிட்ட பெரும்பாலான பேரூராட்சிகளிலும் திமுகவே தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக வேறு கட்சிகளில் இருந்து திமுகவுக்கு பலர் தாவிய நிலையில் தங்களுக்குத்தான் பதவி கிடைக்கும் என நினைத்து வந்ததாக தகவல் வெளியானது. மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் கனவில் பலரும் வலம் வரத் தொடங்கினர்.

ஐ.பெரியசாமி பேட்டி
இந்த நிலையில் திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும் திண்டுக்கல் மாவட்டத்தின் மூத்த நிர்வாகியும், கூட்டுறவு துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கட்சிக்கு உழைத்தவர்களை மதித்து திமுக அவர்களுக்கு உரிய பொறுப்புகளை வழங்கும் எனவும், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் யார் என்பதை தலைமை தான் முடிவு செய்யும் எனவும் தெரிவித்திருந்தார். திண்டுக்கல்லில் புதுமுகமாக போட்டியிட்ட இந்திராணி உள்ளிட்ட சிலர் தங்களுக்கு தான் பதவி கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில் கட்சியில் நீண்டகாலம் உழைத்தவர்களுக்கு தான் பதவி என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருப்பது திண்டுக்கல்லில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேயர் யார்?
இதன் காரணமாக முன்னாள் ஒன்றிய சேர்மன்களான சந்திரசேகரின் மருமகள் சரண்யா, பெருமாள்சாமியின் மனைவி சாந்தி , 5வது வார்ட்டில் வெற்றி பெற்ற சுவாதி, 20வது வார்ட்டில் வெற்றி பெற்ற ஜெயந்தி, 30வது வார்ட்டில் வெற்றி பெற்ற லட்சுமி ஆகிய யாராவது ஒருவருக்குத்தான் மேயர் பதவி கிடைக்கும் என திமுக மூத்த உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர். இதேபோல் தான் கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நகராட்சி பதவிகளுக்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இதனால் பணம் செலவழித்து ஜெயித்த பலரும் பீதியில் வலம் வருவதாகவும் கூறுகின்றனர் திண்டுக்கல் திமுகவினர்.












Click it and Unblock the Notifications