பழனி கோயிலுக்கு குழந்தையுடன் போன தம்பதி.. எக்குதப்பாக வழிகாட்டிய கூகுள் மேப்ஸ்.. கடைசியில் ட்விஸ்ட்
திண்டுக்கல்: தர்மபுரியில் இருந்து டாக்டர் குடும்பத்தினர் 4 மாத கைக்குழந்தையுடன் காரில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் கூகுள் மேப்ஸ் ஐ நம்பி காரை மண் பாதையில் விட்டுள்ளனர். இதில் மழை நேரம் என்பதால் சேருக்குள் கார் சிக்கிக்கொண்டது. இதன்பின்னர் கைக்குழந்தையுடன் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த அவர்களை தீயணைப்பு படையினர் வந்து மீட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் பழனிசாமி (வயது 27). இவரது மனைவி கிருத்திகாவும் (27) டாக்டர் தான். இந்த தம்பதிக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன்படி பழனி முருகன் கோவிலுக்கு நேற்று முன் தினம் இரவு இவர்கள் காரில் கிளம்பியுள்ளனர்.

அப்போது பழனிசாமி தனது சகோதரர் பாவேந்தரையும் (25) உடன் அழைத்துள்ளார். பாவேந்தரும் டாக்டர் தான். பாவேந்தர் காரை ஓட்டியுள்ளார். குடும்பத்தினர் 4 பேரும் காரில் பழனி முருகன் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பாவேந்தர் கூகுள் மேப்ஸ் ஐ பார்த்து காரை ஓட்டி வந்துள்ளார். கார் கரூர் - திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வந்துகொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் கார் வேடச்சந்தூர் தம்மனம்பட்டி பகுதியில் உள்ள மேம்பாலத்தை கடந்து வந்துகொண்டிருந்தது.
இதில் கூகுள் மேப்ஸ் 4 வழிச்சாலையை காண்பிக்காமல், குறுக்கு வழியினை காண்பித்ததாக தெரிகிறது. இதனால் பாவேந்தரும் அந்த மண் சாலையில் காரை திருப்பியுள்ளார். கார் அந்த மண் சாலையில் சென்று கொண்டிருந்தது. மழை நேரம் என்பதால் சேறும் சகதியுமாக இருந்தது. சிறிது தூரம் சென்ற பின்னர் சேற்றில் கார் சிக்கிக்கொண்டது. எவ்வளவு முயற்சித்தும் இருந்த இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட கார் நகரவில்லை.
சரி இனி வந்த பாதையிலேயே சென்று விடலாம் என்று நினைத்து காரை பின்னோக்கி இயக்க முயற்சித்தார். ஆனால் அப்போதும் கார் நகரவில்லை. இதையடுத்து பழனிசாமி காரை விட்டு இறங்கி சேற்றில் நின்றபடி காரை தள்ளியுள்ளார். ஆனாலும் காரை நகர்த்த முடியவில்லை. இதனால் காட்டுக்குள் கைக்குழந்தையுடன் என்ன செய்வதென்று தவித்தப்படி இருந்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் யாரையும் உதவிக்கும் அழைக்க முடியாத சூழல் இருந்துள்ளது.
இந்த நிலையில் தான் வேறு வழியின்றி சென்னை தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார் பழனிசாமி. நடந்த சம்பவம் பற்றி கூறியதும், அவர்கள் வேடச்சந்தூர் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சேற்றில் புதைந்த காரை மீட்டனர். இதன்பிறகே அந்த டாக்டர் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையடுத்து தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த பழனிசாமியின் குடும்பத்தினர், தொடர்ந்து பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர். கூகுள் மேப்ஸை நம்பி நடு வழியில் டாக்டர் தம்பதியினர் கைக்குழந்தையுடன் சிக்கிக்கொண்டு தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications