லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கிய ED அதிகாரி யார்?.. பின்னணி என்ன?
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுதலை செய்ய ரூ.3 கோடி லஞ்சம் வேண்டும் என்று அமலாக்கத்துறையில் பணி செய்வதாக கூறிக் கொண்ட அங்கித் திவாரி என்பவர் கேட்டுள்ளார்.

இதில் முதல் கட்டமாக ரூ.20 லட்சம் தர ஒப்புக் கொண்டார் டாக்டர் சுரேஷ் பாபு. அதன்படி கடந்த மாதம் ரூ.20 லட்சத்தை சுரேஷ் பாபுவிடம் இருந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பெற்றுக்கொண்டார். ஆனால் மேலும் ரூ31 லட்சம் தந்தாக வேண்டும் என அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்டி இருக்கிறார். இதனால் டாக்டர் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இதன்பேரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கித் திவாரியிடம் கொடுக்க சுரேஷ் பாபுவுக்கு அறுவுறுத்தியுள்ளனர். இதன்படியே ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகார் அங்கித் திவாரியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கித் திவாரியின் காரில் இருந்த 31 லட்சம் பணத்தையும் கைப்பற்றினர். அவரிடம் பல மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சப் புகாரில் அமலாக்கத்துறை அதிகாரியே சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அங்கித் திவாரி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஆவார். இதற்கு முன்பு இவர் மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வந்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பணியில் இருந்த அங்கித் திவாரி நடப்பு ஆண்டு ஏப்ரலில் தான் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது கடந்த 2016-ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்கில் இருந்து காப்பாற்றுவதாக கூறி 3 கோடி பேரம் பேசியுள்ளார். இந்த லஞ்ச பணத்தை வாங்கும் போது தான் அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications