திண்டுக்கல் அருகே சட்டக் கல்லூரி மாணவியை கரம் பிடித்த இளைஞர்.. வீட்டையே சூறையாடிய பெண் குடும்பம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சட்டக் கல்லூரி மாணவியை காதலித்து இளைஞர் திருமணம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், அந்த இளைஞனின் வீட்டையே சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெண்ணின் தாய், அப்பா மற்றும் உறவினர்கள் உள்பட 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சாதி மாறி திருமணம், மதம் மாறி திருமணம், பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் என சமூகத்தில் நடக்கும் புரட்சிகளுக்கு இங்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகம். சட்டத்தை தவிர வேறு பாதுகாப்புகள் காதல் திருமணம் செய்தவர்களுக்கு கிடைப்பது இல்லை..

பெற்றோர்கள் காதல் திருமணங்களை, சாதி, அந்தஸ்து, கௌரவம், ஏழை பணக்காரன் என்ற பேதம் போன்ற பல காரணங்களால் காதல் திருமணங்களை எதிர்க்கிறார்கள். பெரும்பாலும் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு ஓடிப்போய் காதல் திருமணங்களை செய்கிறார்கள் காதலர்கள். அப்போது கோபம் அடையும் பெண்ணின் பெற்றோர் அல்லது பையனின் பெற்றோர் கடுமையாக கோபம் அடைந்து எதிர்வினையாற்றுகிறார்கள். அப்படித்தான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொன்னாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 52). அவருடைய மகன் கார்த்திக் (30). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக கார்த்திக் பணியாற்றி வருகிறார். கார்த்திக்கும், அதே ஊரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி திவ்யபாரதி (20) என்பவரும் காதலித்து வந்தார்கள். ஆனால் அவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே காதலர்கள் திருமணம் செய்த தகவல் அறிந்ததும் திவ்யபாரதியின் தந்தை சுப்பிரமணி, தாய் ஆனந்தி மற்றும் உறவினர்கள் சிலர், கார்த்திக்கின் வீட்டுக்கு சென்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், பொருட்களை அடித்து நொறுக்கியும் சூறையாடினார்கள். மேலும் அங்கிருந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து கார்த்திக்கின் தாயார் லட்சுமி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சுப்பிரமணி, ஆனந்தி மற்றும் அவர்களது உறவினர்களான காவியா, சந்தோஷ்குமார், வளர்மதி, அரவிந்த், அழகர்சாமி ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications