சர்க்கார் சம்பவம்.. எங்க என் ஓட்டை காணோம்! அதிகாரிகளை மிரள விட்ட முதன்முறை வாக்காளர்! சாதிச்சுட்டாரே
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முதன்முறையாக வாக்களிக்க இளம் வாக்காளர் ஒருவர் வந்த நிலையில் அவர் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக கூறியதால் கடும் அதிர்ச்சி அடைந்தார். இருந்த போதும் தேர்தல் விதிகளை பயன்படுத்தி முதன் முறையாக டெண்டர் ஓட்டு மூலம் தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார் அந்த இளைஞர். அதுமட்டுமல்லாமல் தீயணைப்புத்துறை வீரர் ஒருவரும் டெண்டர் வாக்கினை பதிவு செய்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட 128-வது வாக்குச்சாவடி மையத்தில் வரிசை எண் 720-ல் உள்ள இளம் வாக்காளர் துவாரகேஷ் என்பவர் மிகுந்த ஆர்வத்துடன் தனது முதல் வாக்கைச் செலுத்த வந்திருந்தார்.
ஆனால், அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகள், அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த துவாரகேஷின் உறவினர்கள் மற்றும் அங்கிருந்த திமுகவினர், அதிகாரிகளிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

"உரிய ஆவணங்களுடன் வந்திருக்கும் வாக்காளரை அனுமதிக்காமல், யாரோ ஒருவரை கள்ள ஓட்டு போட அனுமதித்தது எப்படி?" என அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் அதிமுகவினருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், முறையான சரிபார்ப்பு இன்றி கள்ள ஓட்டு போடத் துணை போவதாகவும் திமுக தரப்பில் பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி டெண்டர் ஓட்டு போட வைத்தனர். இதே போல், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டதாக தீயணைப்பு வீரர் புகார் அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் தலையீட்டிற்குப் பிறகு அவர் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
தமிழகத்தில் இன்று எக்ஸிட் போல் வராது.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நிறுத்தம் ஏன்?
திண்டுக்கல் ஓ.எம்.ஆர் பட்டி பகுதியில் உள்ள கென்னடி பள்ளியில் அமைந்துள்ள 278-வது வாக்குச்சாவடியில், தீயணைப்புத் துறையில் பணியாற்றும் கணேசன் என்பவர் தனது வாக்கினைச் செலுத்த வருகை தந்தார். அப்போது, அவரது வாக்கு ஏற்கனவே மற்றவரால் செலுத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அங்கிருந்த தேர்தல் அலுவலர்களிடம் அவர் முறையிட்டபோது, அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த கணேசன், தனது ஜனநாயகக் கடமையைச் செய்ய முடியாமல் அங்கிருந்து வெளியேற முயன்றார். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் சரவணனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்த ஆட்சியர், பாதிக்கப்பட்ட வாக்காளர் முறைப்படி 'டெண்டர் ஓட்டு' (Tendered Vote) அளிக்க முழு உரிமை உண்டு. வாக்கு எண்ணிக்கையின் போது அவரது வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவருக்குப் பதிலாக கள்ள ஓட்டு போட்ட நபரை சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் கண்டறிந்து, அந்த முறையற்ற வாக்கு உடனடியாக ரத்து செய்யப்படும்." என்றார்.
ஆட்சியரின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, கணேசன் மீண்டும் வாக்குச்சாவடிக்குச் சென்று தனது டெண்டர் வாக்கினைப் பதிவு செய்தார். தனது வாக்கை திருடிய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.













Click it and Unblock the Notifications