பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.. தட்டித் தூக்கிய அண்ணாமலை! திமுக, மநீம கட்சியினருக்கு ஷாக்!
திண்டுக்கல்: பழனி சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பூவேந்தன், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். திமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த பூவேந்தன் சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தா.பூவேந்தன். திமுக சார்பில் எம்.எல்.ஏவாக இருந்த ஆயக்குடி பூவேந்தன் தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பரிச்சயம் கொண்டவர். விவசாயிகள், பொதுமக்களுக்காக போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

மீண்டும் 2001லும் திமுக சார்பில் பூவேந்தனுக்கு சீட் வழங்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியடைந்தார். 2006ல் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. 2011ல் பழனி தொகுதி பொதுத் தொகுய்தியாக மாறிய நிலையில், பூவேந்தனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார் அங்கு தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியபிறகு அக்கட்சியில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ பூவேந்தன். 2021 சட்டமன்றத் தேர்தல் மநீம சார்பில் பழனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் பூவேந்தன்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில், மநீம கோவை மண்டல நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகங்களை வகுக்க இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ பூவேந்தன். அவரை கட்சிக்கொடி துண்டை அணிவித்து வரவேற்றுள்ளார் அண்ணாமலை.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "பழநி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் ஆயக்குடி தா. பூவேந்தன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியாலும், தலைமைப் பண்புகளாலும் ஈர்க்கப்பட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் பழனி கனகராஜ் முன்னிலையில், கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அண்ணன் பூவேந்தன் அவர்களை மனமார வரவேற்று மகிழ்கிறோம். அவரது வருகை, தமிழ்நாடு பாஜகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications