வயநாடு மக்களுக்காக மொய் விருந்து..லட்சக்கணக்கில் குவிந்த பணம்! நெகிழ்ந்து போன பினராயி விஜயன்!
திண்டுக்கல்: வயநாடு மக்களுக்கு உதவுவதற்காக திண்டுக்கல்லில் மொய் விருந்து நடந்த நிலையில், மொய் விருந்தில் வசூலான பணத்தோடு, 'பண்ணிடுவோம்' யூட்யூப் சேனல் வசூலித்த பணம், சிறுமியின் உண்டியல் பணம் ஆகியவை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வயநாட்டில் உள்ள முண்டகாயம், சூரல்மாலா ஆகிய இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் ஆகியவை விழுந்தன. இதில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் 250க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
வயநாட்டில் பெரும் நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவிக் கரம் நீண்டு வருகிறது தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டும் அல்லாமல் நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் தன்னார்வலர்கள் என பலரும் வயநாட்டிற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் உணவுப் பொருட்களாக தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் எடுத்துச் சென்று அங்குள்ள மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் வயநாடு மக்களுக்கு உதவுவதற்காக திண்டுக்கல்லில் கடந்த 7ஆம் தேதி பிரபல உணவகத்தில் மொய் விருந்து கடந்த 7ஆம் தேதி இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இந்த மொய் விருந்து திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடையில் நடைபெற்றது. இந்த மொய் விருந்தில் சிக்கன் பிரியாணி,சிக்கன் 65,பீர் நீ,தயிர் வெங்காயம், தால்சா மற்றும் நெய் சாதம் ஆகியவை வழங்கப்பட்டது.
இங்கு சாப்பிட வருபவர்கள் சாப்பிட்டு முடித்த பின் இலைக்கு அடியில் தங்களால் முடிந்த பணத்தினை வைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விருந்து முடிந்த பின்பு பத்து ரூபாய் முதல் பல ஆயிரங்கள் மொய் விருந்தில் கலந்து கொண்டவர்கள் வைத்துச் சென்றனர். விருந்து முடிந்ததும் இலையினை எடுத்து பின்னர் பணத்தினை வைக்கும் பொழுது கடையின் உரிமையாளரே கண்கலங்கினார்.
மேலும், மொய் விருந்து நடைபெறும் கடையில் வெளியே 7 மணி முதல் பொதுமக்கள் கூடினர்.தங்களால் நேரடியாக கேரள மாநிலம் சென்று உதவுவதற்கு இல்லாத சூழ்நிலையில் தற்பொழுது மொய் விருந்தில் கலந்து கொண்டு தங்களால் இயன்றதை அளித்து அண்டை மாநிலமான கேரள மாநில சொந்தங்களுக்கு உதவுவது தங்களது கடமை எனக் கூறி உண்டியலிலும் நிறைய பணத்தை போட்டுச் சென்றனர்.

இந்த மொய் விருந்தில் சுமார் மூன்று லட்சம் வசூலானது. இதே பன்னிடுவோம் என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி வரும் இளைஞர் ஒருவர் தான் மக்களிடம் வசூலித்த மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், சிறு குழந்தைகள் கொடுத்த 3900 ரூபாய் என மொத்தம் மொத்தம் 6 லட்சத்து 83,900 ரூபாய் இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட கேரள முதலமைச்சர் அவர்கள் திண்டுக்கல் மக்களுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
கேரள மக்களுக்காக, தமிழ்நாட்டு மக்கள், அதிலும் குறிப்பாக திண்டுக்கல் மக்கள் உறுதுணையாக இருந்தது குறித்து தான் தொலைக்காட்சிகளில் பார்த்ததாகவும் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications