சாரை சாரையாக மாட்டு வண்டிகள்! புல்லரிக்க வைத்த பூப்புனித விழா! ஊர் மெச்ச சீர் செய்த தாய்மாமன்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தனது அக்காள் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு 15 மாட்டு வண்டிகளில் தாய் மாமன் ஒருவர் சீர் செய்து அனுப்பியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களில் தாய் மாமனுக்கு என தனி மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் வேறு எந்த சொந்தக்காரர்களுக்கும் இருப்பதில்லை. அதிலும் பெண் குழந்தை பிறந்த குடும்பங்களில் தாய் மாமனின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கும். பெண் குழந்தை பூப்பெய்துவது தொடங்கி வளர்ந்து ஆளாகி திருமணம் செய்து கொடுப்பது வரை தாய் மாமனின் தயவு தேவை. அதிலும் திருமண விஷயங்களில் தாய் மாமன் ஒப்புதல் பெற்றால்தான் திருமணமே நிச்சயிக்கப்படும்.

குடும்ப நிகழ்வுகளில் மட்டுமல்லாது வரலாற்று நிகழ்வுகளிலும் தாய் மாமன் இன்றியமையாததாக இருக்கிறார். போருக்கு செல்லும் அரசன் தனக்கு துணையாக ஆயிரம் பேர் இருந்தாலும் தாய் மாமன் கொடுக்கும் அறிவுரைகள்தான் அவனின் உயிரை காப்பாற்றும் தாரக மந்திரமாக இருக்கும். அதேபோல மருமகனுக்காக தாய் மாமன்கள் நடத்தும் போர் மூர்க்கமானவையாக இருக்கும். போரில் உயிரைவிட கூட தாய் மாமன்கள் தயங்க மாட்டார்கள். அதேபோல திருமணம், பிறந்த நாள், வளைகாப்பு, காது குத்து என எந்த சுப நிகழ்வுகளிலும் தாய் மாமன் கொடுக்கும் சீர் மிகவும் முக்கியமானதாகும்.
மற்ற சீர்களை விட இதற்குதான் எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் அதிகமாக இருக்கும். இந்த சீர்கள் மற்ற சீர்களை ஓரம் கட்டும் அளவுக்கு பெரியதாக இருக்கும். இல்லையென்றாலும் கூட தாய் மாமன் சீருக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அப்படிதான் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தாய்மாமன் ஒருவர் தனது அக்கா மகளுக்காக ஊரே வியக்கும் வண்ணம் சீரை கொண்டுவந்து அசத்தி இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் முருகபவனத்தை சேர்ந்த டீ கடை உரிமையாளர் ஒருவர் தனது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவை நடத்தினார். இதற்காக சிறுமியின் தாய் மாமன் கொண்டு வந்த சீரை ஊரே வியந்து பார்த்து சென்றது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பட்டுச்சேலை, தங்க நகை, பழங்கள், அரிசி மூட்டை, ஆடு, பலசரக்கு சாமான்கள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள், பூமாலை, கேக் வகைகள், இனிப்பு உள்ளிட்ட பொருட்களை 15 மாட்டு வண்டிகளில் கொண்டுவந்துள்ளார். திருமண மண்டபத்திற்கு வரும் வழி முழுவதும் தாரை தப்பட்டைகள் முழங்க, பட்டாசு வெடித்து இந்த சீர்கள் கொண்டுவரப்பட்டன. பொதுவாக கோவை போன்ற கொங்கு மாவட்டங்களில் இதுபோன்ற நடைமுறை இப்போதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கொங்கு மண்டலத்தின் முடிவில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோன்ற பாரம்பரிய நடைமுறை பின்பற்றப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications