இங்க பாருங்களேன் அதிசயத்த.. மிகத் தாழ்வாகப் பறந்த இந்தியா விமானப்படை விமானம்! பரபரப்பான திண்டுக்கல்
திண்டுக்கல்: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையிலும், முப்படைகளும் தயார் நிலையிலேயே இருக்கின்றன. இந்த நிலையில் திண்டுக்கல்லில் காலை சுமார் 10.40 மணியளவில் மிகத் தாழ்வாக போர் விமானம் பறந்து சென்ற நிலையில், பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்னதாக போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என அறிவித்திருந்தது. அதாவது போர் போன்ற காலங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒத்திகை இது.
இதற்காக முப்படைகளும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் பாதுகாப்பு ஒத்திகை என உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பி விட்டு இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலம் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்தது.

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கை முடிந்து விடவில்லை எனவும் பாகிஸ்தான் நடந்து கொள்வதை பொறுத்தே இந்தியாவின் நிலைப்பாடு இருக்கும் என இந்தியா கூறியிருந்தது. தொடர்ந்து முப்படைகளும் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இன்று காலை சுமார் 10.40 மணியளவில் மிகத் தாழ்வாக போர் விமானம் பறந்து சென்றது. அந்த விமானத்தில் இந்திய விமான படையின் சின்னமும் இடம் பெற்று இருந்தது. அது விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் - 32 ரக விமானம் எனவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தாம்பரம், சூலூர் ஆகிய பகுதிகளில் விமானப்படை தளங்கள் இருக்கின்றன. எனவே கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இந்த விமான பயிற்சிக்காக வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே திண்டுக்கல்லில் பல நாட்களாக போர் விமானங்கள் சுற்றி வருகின்றன. ராணுவ ஹெலிகாப்டர்களும் அடிக்கடி வலம் வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில சமயங்களில் மட்டுமே அந்த விமானங்கள் தென்படும். அதுவும் வெகு தொலைவில். பல சமயங்களில் வெறும் சப்தம் மட்டுமே கேட்கும்.
இந்த நிலையில் பொதுமக்கள் கண்ணுக்கு தெரியும்படி மிக மிக தாழ்வாக போர் விமானம் பறந்து சென்றது. பலத்த சத்தத்துடன் ஏஎன் - 32 ரக போர் விமானம் கோவிலூர், பெரியகோட்டை, பில்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மிக மிக தாழ்வாக தென்பட்டனர். மேலும் கிராமங்களை சுற்றி வருவது போல வந்த விமானம் மீண்டும் உயரத்தில் பறந்து சென்றது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் கடந்த சில வருடங்களாக போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் தென்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், மிகப்பெரிய அதிர்வோடு வெடிச்சத்தம் கேட்பது என மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் அதனை போக்க ஆய்வு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மிகத் தாழ்வாக போர் விமானம் பறந்து வந்த நிலையில், மக்கள் ஆர்வத்துடன் அந்த விமானங்களை பார்த்து ரசித்தனர். விமானப் படை வீரர்கள் தாழ்வாக விமானத்தை இயக்கி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications