"என் செல்போன திருடுனீங்கல்ல.. இனி யாருக்கிட்டேயும் இருக்கக்கூடாது" - போலீஸில் சிக்கிய "சபத திருடன்"
கூலித்தொழிலாளியாக இருந்த தான், எப்படி செல்போன் திருடனாக மாறினேன் என்பதே 'பாட்ஷா' திரைப்பட ரேஞ்சுக்கு பிளாஷ்பேக் கூறியிருக்கிறான் அந்த திருடன்.
திண்டுக்கல்: தனது செல்போன் திருடுபோன விரக்தியில் இனி ஒருவரிடமும் செல்போன் இருக்கக் கூடாது என சபதமிட்டு நூற்றுக்கணக்கான செல்போன்களை திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் "கூலித்தொழிலாளியாக இருந்த நான்.. எப்படி திருடனாக மாறினேன் தெரியுமா?" என சினிமா கதாநாயகனை போல பேசியுள்ளான் அந்த திருடன்.
இதையடுத்து, அவன் திருடிய சாதாரண செல்போன்கள் முதல் விலை உயர்ந்த செல்போன்கள் வரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

விறுவிறு 'பிளாஷ்பேக்'
பல 'ஆன்ட்டி - ஹீரோ' சப்ஜெக்ட் திரைப்படங்களை பார்த்திருப்போம். அதில் திருடனாகவோ அல்லது சைக்கோ கொலையாளியாகவோ கதாநாயகன் இருப்பார். போலீஸ் கண்களில் மண்ணை தூவி பல குற்றங்களை செய்யும் அவர் இறுதியில் பிடிபட்டும் விடுவார். அப்போது அவர், தனக்கு நடந்த சில அநியாயங்களை கூறி, "இதனால்தான் இப்படி மாறினேன்" எனக் கூறுவார் அல்லவா.. அதே பாணியில், திண்டுக்கல்லில் சிக்கிய திருடன் தனது சோக பிளாஷ்பேக்கை போலீஸில் கூறியிருக்கிறான். அந்த சம்பவம் குறித்து இங்கு காண்போம்.

சின்னாபின்னமான திருடன்
திண்டுக்கல் மாவட்டம் பழைய செம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி. இவரது வீட்டில் கடந்த வாரம் பட்டப்பகலில் புகுந்த திருடன், அங்கிருந்த விலைமதிப்பு மிகுந்த செல்போனை திருடிவிட்டு தப்பியோட முயன்றுள்ளான். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவனை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவனை சாலையில் போட்டு புரட்டி எடுத்து நையப்புடைத்தனர்.

கூலித்தொழிலாளி டூ செல்போன் திருடன்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் இருந்து திருடனை மீட்டனர். அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் ஈரோட்டை சேர்ந்த செல்வம் (37) என்பது தெரியவந்தது. மேலும், கூலித்தொழிலாளியாக இருந்து எப்படி செல்போன் திருடனாக மாறினேன் என தனது பிளாஷ்பேக்கை 'பாட்ஷா' திரைப்பட ரேஞ்சுக்கு கூறியிருக்கிறான் அவன்.

வெறித்தனமான சபதம்
அதாவது, கூலித்தொழிலாளியாக இருந்த செல்வம் தினமும் இரவு மது அருந்துவது வழக்கமாம். அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் மது அருந்தி போதையில் இருந்த போது, அவனது செல்போன் திருடு போய்விட்டதாம். அன்றைக்கு தான் ஒரு சபதத்தை எடுத்தாராம். "என்னுடைய செல்போனையே திருடினீங்களே.. இனி யாரிடமும் செல்போன் இருக்கக்கூடாது" என்பதுதான் அந்த சபதம். அந்த சபதத்தின்படியே இன்று பிரபல செல்போன் திருடனாக தான் உருவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளான். இதை கேட்ட போலீஸார், அவரை செமத்தியாக கவனித்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications