இதுதாங்க நம்ம தமிழ்நாடு! இந்துக்கள் திருவிழா.. அன்னதானம் போட்டது இஸ்லாமியர்கள்! பழனிக்கு பாராட்டு.!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே கோயில் விழாவில் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழ்நாடு இந்தியாவில் இருக்கும் மாநிலங்களிலேயே கல்வி அறிவிலும், மத நல்லிணக்கத்திலும் சகோதரத்துவத்திலும், முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. சில பகுதிகளில் மதத்தின் பெயரால் கலவரங்கள் பிரச்சனைகள் வெடித்து மக்களின் அமைதி சீர்குலைக்கும் வகையில் மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

ஆனால், அனைத்து மதங்களும் ஒன்றுதான்.. அவை அன்பைத்தான் போதிக்கின்றன என இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சகோதரர்களாக பிரச்சனை இன்றி வாழ்ந்து வருவதும் ஒருவரது விழாக்களில் மற்றொருவர் கலந்து கொண்டு சகஜமாக பழகுவதும் தமிழ்நாட்டில் தான்..
மத நல்லிணக்கம்: அப்படி ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்கள் பிற மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் வழக்கம். மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவுக்கு ரோஸ் மில்க் வழங்கும் இஸ்லாமியர்கள், பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள், மசூதி திறப்பு விழாவுக்கு சீர் கொண்டு சென்ற இந்துக்கள் என பல செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவுக்கு மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்துவரும் தமிழ்நாட்டில் மற்றொரு சம்பவம் அதே போல நடந்திருக்கிறது.

கோவில் திருவிழா: திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே கோயில் விழாவில் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் உள்ள பட்டாளத்தம்மன் திருக்கோயிலில் ஆனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.
இஸ்லாமியர்கள் அன்னதானம்: விழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னாதானம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கும், பட்டாளம்மன் திருக்கோவில் பக்தர்களுக்கும் ஆயக்குடி காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அமைப்பின் சார்பில் திருக்கோயில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆரத்தி எடுத்து வரவேற்பு: முன்னதாக திருக்கோயிலுக்கு வருகைதந்த காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அமைப்பின் நிறுவனர் தலைமையிலான இஸ்லாமியர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை நிறைவுபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சமூக ஒற்றுமை: இஸ்லாமியர்கள் அன்னதானம் செய்ய முண்ணூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதான உணவு அருந்தினர். சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் இந்து சமய கோயில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்று அன்னதானம் வழங்கியது வரவேற்பை பெற்றது. இங்கு மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோல் சமூக நல்லிணக்கத்தை போற்றுக் வகையில் இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிகளில் இந்துக்களும், இந்து கோவில்களுக்கு இஸ்லாமியர்கள் சீர் கொண்டு செல்லும் நிகழ்வுகளும் தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து நடத்திய மீன்பிடி திருவிழா, கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள் என அப்பகுதிகள் மக்கள் சுமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications