ஹார்ட் அட்டாக்கே வந்துருச்சு..திண்டுக்கல்லை திணற வைத்த வெடிச் சத்தம்! முதன்முறையாக ஆட்சியர் விளக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டிருந்தனர். இந்நிலையில், பெருத்த ஒலியுடன் கூடிய அதிர்வு நிகழ்வது நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என்பதால் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை எனவும், இதுதொடர்பாக அறிவியல்பூர்வமாக ஆய்வு விரைவில் நடைபெறவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாகவே திண்டுக்கல் மக்கள் அடிக்கடி பீதிக்குள்ளாகி வருகின்றனர. நத்தம், வேடசந்தூர், எரியோடு, உள்ளிட்ட பல பகுதிகளில் கனிம வளங்கள் இருப்பதாக பீதி கிளப்பப்பட்ட நிலையில் அடிக்கடி அங்கு போர் விமானங்கள் சுற்றி வந்தன.
மேலும் திடீர் திடீரென வெடிச் சத்தமும் கேட்டு வந்தது. ஆனால் இது தொடர்பாக கனிமவளத்துறை அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகமோ விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில், சில நாட்கள் வெடிச் சத்த தொல்லை இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் தற்போது மிகப் பெரிய அளவிலான வெடிச் சத்தமும் கேட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த மார்ச் 16ஆம் தேதியும் 17ஆம் தேதியும் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. சுமார் 20 நிமிட இடைவேளையில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது. சிறிது நேரத்தில் வானில் விமானங்கள் பறப்பது போன்ற சத்தமும் கேட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வெடிச்சத்தமும் நில அதிர்வும் உணரப்பட்டது. சில இடங்களில் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
திடீர் திடீரென கேட்கும் வெடிச்சத்தத்தால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள் பெரும் அச்சமடைந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் விளக்க அளிக்கவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், பெருத்த ஒலியுடன் கூடிய அதிர்வு நிகழ்வது நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என்பதால் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை எனவும், இதுதொடர்பாக அறிவியல்பூர்வமாக ஆய்வு விரைவில் நடைபெறவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் நகர் மற்றும் வேடசந்தூர் வட்டங்களில் 16.04.2025 மற்றும் 17.04.2025 ஆகிய நாட்களில் பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலி கேட்கப்பட்டது. தேசிய நில அதிர்வு மைய இணையதளத்தில் (National Center for Seismology-NCS) 16.04.2025 மற்றும் 17.04.2025 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் நில அதிர்வுகள் குறித்த பதிவுகள் ஏதும் காணப்படவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோன்று தொடர்ந்து ஏற்படும் திடீர் ஒலியோசை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கோரிக்கையின்பேரில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து புவியியல் மற்றும் நிலநடுக்கவியல் தொடர்பான துறையின் நான்கு நிபுணர்கள் அடங்கிய குழு 01.04.2023 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என அறிக்கை சமர்ப்பித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகபடியான சத்தம் ஏற்படுவதற்கான உரிய காரணங்களை துல்லியமாக கண்டறியும் பொருட்டும் அதற்கேற்றவாறு மாவட்ட நிருவாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பொதுமக்களை தெளிவுபடுத்திடும் பொருட்டும், மேற்காணும் நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்திட புவியியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றினை திண்டுக்கல் மாவட்டத்திற்கு மீண்டும் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு தேசிய நிலநடுக்கவியல் மையத்தைச் சேர்ந்த (National Center for Seismology) நிபுணர்கள் கொண்ட குழுவானது விரைவில் ஆய்வு செய்யவுள்ளனர்.
எனவே பெருத்த ஒலியுடன் கூடிய அதிர்வு நிகழ்வது நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என்பதால் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. இதுதொடர்பாக அறிவியல்பூர்வமாக ஆய்வு விரைவில் நடைபெறவுள்ளது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications