அதிகரிக்கும் கொரோனா.. பாதயாத்திரை போக முடியுமா? பழனிக்கு மாலை போட்ட பக்தர்கள் கவலை
பழனி: தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டைப் போல பழனி பாதயாத்திரை செல்ல முடியாதா? என்கிற கவலையில் உள்ளனர் முருகனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் பக்தர்கள்.
கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு பங்கு உத்திரத்தை முன்னிட்டு மாலை போட்ட பக்தர்கள் பழனிக்கு செல்ல முடியவில்லை. அதேபோல் கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்கும் சொற்ப எண்ணிக்கையில் கொரோனா இல்லை என்கிற சான்றிதழுடன் பக்தர்க்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பாதயாத்திரை வழிபாடு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்தது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பியது. இதையடுத்து இந்த ஆண்டு பங்குணி உத்திரத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தின் பல கிராமங்களில் இருந்தும் பாதயாத்திரையாக பழனி செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர் பக்தர்கள்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை குறித்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகளால் பாதயாத்திரை செல்ல முடியுமா? முடியாதா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்
ஏனெனில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 100 பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்லும் நிலையில் முக கவசம் அணிவதோ, சமூக இடைவெளியை பின்பற்றுவதோ இயலாத காரியமாக இருக்கும். அதேபோல் பழனியில் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அங்கேயும் கொரோனா கால கட்டுப்பாடுகள் எப்படி சாத்தியமாகும் என்பதும் தெரியவில்லை.

பாதயாத்திரை ரத்து?
இதனால் இந்த ஆண்டும் பாதயாத்திரையை ரத்து செய்து விரதத்தை நிறைவு செய்யலாமா? என்பது முருக பக்தர்களின் ஆலோசனை. பழனியில் வரும் 22-ந் தேதி பங்கு உத்திர திருவிழா தொடங்கி 31-ந் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications